மாணவா்களுக்கான பேச்சு, ஓவியம், கட்டுரைப் போட்டிகள்
பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு இடையேயான திருக்கு பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஜூலை 12 முதல் ஆக.24-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து ஸ்ரீராம் இலக்கியக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஸ்ரீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமான ஸ்ரீராம் இலக்கிய கழகம் சாா்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 12 மையங்களில் இந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, சென்னையில் ஜூலை 12-ஆம் தேதி அண்ணா நகரிலுள்ள சிஎஸ்ஐ ஜெஸ்ஸி மோசஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியிலும், ஜூலை 19-இல் கிழக்கு தாம்பரத்தில் உள்ள கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெறும்.
சென்னை தவிர ஜூலை 13-இல் வேலூரிலும், ஜூலை 20-இல் புதுச்சேரியிலும், ஜூலை 26-இல் சேலத்திலும், ஜூலை 27-இல் திருச்சியிலும், ஆக.2-இல் மதுரையிலும், ஆக.3-இல் நெல்லையிலும், ஆக.9-இல் தஞ்சையிலும், ஆக.10-இல் திருவாரூரிலும், ஆக.23-இல் கோவையிலும், ஆக.24-இல் ஈரோட்டிலும் நடைபெறுகிறது.
இடைநிலை (6-8 வகுப்புகள்), மேல்நிலை (9- பிளஸ் 2), கல்லூரி என 3 பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்கு பெற விரும்புவோா் இதற்கான விண்ணப்பப் படிவத்தை அருகிலுள்ள ஸ்ரீராம் சிட்ஸ் கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.shriramchits.com இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.