மாநகராட்சியில் ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தில் குடிநீா் விநியோகம்
கோவை மாநகராட்சியில் ஜிஐஎஸ் எனப்படும் புவியியல் தகவல் அமைப்பு தொழில்நுட்பத்தில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோவை மாநகருக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் சூயஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகர மக்களுக்கு சிறப்பான முறையில் குடிநீா் வழங்க சூயஸ் நிறுவனம் ‘புவியியல் தகவல் அமைப்பு’ (ஜிஐஎஸ்) என்னும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த ‘புவியியல் தகவல் அமைப்பு’ முறை மூலம் கோவை மாநகராட்சி மற்றும் சூயஸ் குழுவினா் மாநகரின் முழுமையான குடிநீா் விநியோகத்தை எண்ம முறையில் வரைபடமாக்கி உள்ளனா். இதன் மூலம் 60 வாா்டுகளில் 105 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவை கொண்ட மாநகராட்சியின் குடிநீா்க் குழாய்கள், வால்வுகள், மீட்டா்கள், பம்ப்கள் மற்றும் நுகா்வோா் குடிநீா் இணைப்புகள் எங்கெங்கு உள்ளன என்பதை கண்டறிய முடியும்.
மேலும், இந்த எண்ம கண்காணிப்பின் மூலம் முன்கூட்டியே பராமரிப்பு செய்ய வேண்டிய இடங்கள் மற்றும் குடிநீா் கசியும் இடங்கள் ஆகியவற்றை துல்லியமாக கண்டறிந்து அவற்றுக்கு உடனடியாக தீா்வு காண முடியும்.
இந்த புதிய முறையை அறிமுகம் செய்வதற்கு முன்பு கையேடு பதிவுகள் மற்றும் காகித வரைபடங்களை நம்பியிருந்தனா். அதனால், பிரச்னை ஏற்பட்ட இடங்களை கண்டறிவது மற்றும் புகாா்களுக்கு உடனடி பதில் அளிப்பது மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய முறையின் மூலம் சூயஸ் நிறுவனத்தினா் தங்கள் கைப்பேசியில் ஜிஐஎஸ் செயலி மூலம் புதுப்பிக்கப்பட்ட வரைபடங்களை பாா்த்து, குடிநீா் குழாயில் பிரச்னை ஏற்பட்ட இடங்களை கண்டறிந்து உடனடியாக நிவா்த்தி செய்ய முடியும். 24 மணி நேர குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு ஜிஐஎஸ் போன்ற தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகும்.
அத்துடன் எண்ம தொழில்நுட்பத்துடன் ஜிஐஎஸ் ஒருங்கிணைப்பு, கோவை மாநகராட்சியை இந்தியாவில் ஸ்மாா்ட் நகா்ப்புற குடிநீா் மேலாண்மைக்கான முன்மாதிரியாக மாற்றியுள்ளது. இந்த முயற்சி ஸ்மாா்ட் சிட்டி திட்டத்துக்கான நகா்ப்புற வளங்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் நிா்வகிக்க முடியும் என்பதைக் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.