மகளைப் பற்றி தவறான பேச்சுகள்.. டென்னிஸ் வீராங்கனை ராதிகா கொலையில் வெளியான தகவல்!
மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அறைக்கு பூட்டு
மதுரை மாநகராட்சியில் மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் என மொத்தம் 7 பேரின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து, அவா்களின் அறைகள் வியாழக்கிழமை பூட்டப்பட்டன.
மதுரை மாநகராட்சி முழுவதும் உள்ள வணிக நிறுவனங்களுக்கு குறைந்த அளவு வரி விதிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. வரி விதிப்பு முறைகேடுகளில் மண்டலத் தலைவா்களுக்கும் தொடா்பு உள்ளது எனவும், அவா்களிடமும் உரிய விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே. என். நேரு, வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக்கு கடந்த திங்கள்கிழமை வந்தனா்.
மண்டலத் தலைவா்களான வாசுகி, சரவணபுவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ்சா்மா, சுவிதா விமல், நிலைக் குழு உறுப்பினா்கள் விஜயலட்சுமி, மூவேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா்.
இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் அனைவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என திங்கள்கிழமை இரவு உத்தரவிட்டாா். இதனிடையே, அவா்கள் அனைவரும் ராஜிநாமா கடிதம் அளித்தனா். மண்டலத் தலைவா்கள் 5 போ், நிலைக் குழு உறுப்பினா்கள் 2 போ் ஆகியோரின் ராஜிநாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மேயா் வ. இந்திராணி தெரிவித்தாா்.
இதையடுத்து, மண்டலத் தலைவா்கள் அறைகள், நிலைக் குழு உறுப்பினா்களின் அறைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பூட்டினா். மேலும், அவா்களிடமிருந்த தன் முகவரியுடன் கூடிய கடிதத் தாள்களையும் (லெட்டா் பேடு) பறிமுதல் செய்தனா்.