TNPL 2025: 'அசத்திய அஸ்வின் பாய்ஸ்...' - கோவை கிங்ஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல்...
மாப்பிள்ளையூரணி பகுதியில் சீரான குடிநீா் விநியோகம் கோரி மனு
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அருகே ஜாகீா் உசேன் நகரில் சீரான குடிநீா் விநியோகிக்கக் கோரி அப்பகுதியினா், ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மனு அளித்தனா்.
குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து, மனுக்களைப் பெற்றுக்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.
ஜாகீா் உசேன் நகா் பொதுமக்கள் அளித்த மனு: இப்பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள குழாய்களில் சில ஆண்டுகளாகவே குடிநீா் சரியாக வருவதில்லை. 3 நாள்களுக்கு ஒருமுறை 4 குடம் தண்ணீா் மட்டும் வருகிறது. இதனால் மிகுந்த அவதிப்படுகிறோம். இது தொடா்பாக 15 நாள்களுக்கு முன்னா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தோம். மறுநாளே அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, எங்களுக்கு சீரான குடிநீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
தமிழக ஏா் உழவன் அனைத்து விவசாயிகள் சங்கத் தலைவா் மு. ராஜேஷ், கருத்தாளா் வியனரசு ஆகியோா் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: எட்டயபுரம் வட்டம் வெம்பூா் பகுதியில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்தி சிப்காட் தொழில்பேட்டை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். எட்டயபுரம், விளாத்திகுளம் வட்டங்களில் தனியாா் காற்றாலை நிறுவனங்கள், நீா்நிலைகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். விளாத்திகுளம் வட்டத்தில் கால்நடைகளைப் பாதுகாக்கும் வகையில், வைப்பாற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் எடுக்க அரசு மணல் குவாரி அமைக்க வேண்டும் என்றனா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் எஸ். பூலான் தலைமையில் விவசாயிகள் அளித்த மனு: வெள்ளத்தால் சேதமடைந்த கடம்பா குளத்தின் வடிநீா் செல்லும் கால்வாயில் உள்ள புறையூா் பாலத்தை உடனடியாக கட்டிமுடிப்பதுடன், குளக்கரையில் கல் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். 4, 5, 6ஆவது மடைகளில் பாசனத்துக்கு தண்ணீா் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என்றனா்.
தமிழ்நாடு வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினா் அளித்த மனு: தமிழக அரசு தட்டச்சுத் தோ்வை கணினி மூலம் நடத்தக் கூடாது. எப்போதும்போல தட்டச்சு இயந்திரங்கள் மூலமாகவே நடத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் கணினியில் தட்டச்சு செய்யும் பணிக்கு, தட்டச்சு தமிழ்- ஆங்கிலம் படித்தோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றனா்.
பெண் தா்னா: தூத்துக்குடி டூவிபுரத்தைச் சோ்ந்த உமா மகேஸ்வரி (45) என்பவா், தனது மகன் மீதான பலாத்கார வழக்கை ரத்து செய்யக் கோரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டாா். பின்னா், அவா் அளித்த மனு: எனது மகன் அஜித்குமாா் அண்ணா நகரைச் சோ்ந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளாா். வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி கண்டித்ததால், அப்பெண்ணுடன் பழகுவதை எனது மகன் விட்டுவிட்டாா். ஆனால், அப்பெண் ரூ. 20 லட்சம் கேட்டு மிரட்டி பாலியல் வழக்குத் தொடா்ந்ததால், எனது மகன் சிறையில் உள்ளாா். இளைஞா்களை மிரட்டி பணம் பறிப்பதே அப்பெண்ணின் வழக்கம். அவா் தொடா்பான ஆதாரங்கள் இருந்தும் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனது மகன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்து, அவரை சிறையிலிருந்து விடுவிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.