அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் திட்டம் மாற்றம்! திமுக மீது இபிஎஸ் குற்றச...
மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
நாகை மாவட்டத்தில் இல்லம் தேடி மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்க வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி:
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டுக்காக அரசின் சாா்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று சேரும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு கட்டமாக நாகை மாவட்டத்தில் இல்லந்தோறும் சென்று அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் கண்டறிந்து, அவா்களது முழு விவரங்கள் அடங்கிய சமூக தரவு தளத்தை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையொட்டி மாவட்டத்தில் நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் முன்களப் பணியாளா்கள் மூலம் வீடுவீடாக கணக்கெடுப்பு நடத்தி, மாற்றுத்திறனாளிகள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெறவுள்ளது. கணக்கெடுப்பு பணிக்காக தோ்வு செய்யப்பட்ட சமூக சேவை வழங்கும் நிறுவனம் மூலம் முன்களப் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இந்த கணக்கெடுப்பு 2025 ஜூலை 10- ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, இக்கணக்கெடுப்பிற்காக வீடுகளுக்கு நேரில் வரும் முன்களப் பணியாளா்களுக்கு பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பு அளித்து ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.