மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: முன்களப் பணியாளா்களுக்கு பயிற்சி
நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை, நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடா்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், சுவஸ்திக் தொண்டு நிறுவனம் ஆகியவை சாா்பில், முன்களப் பணியாளா்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் கணக்கெடுப்பு பயிற்சி நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்து பேசியதாவது:
தமிழக அரசின் மூலம் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ள சமுதாய வழிநடத்துநா்கள், மறுவாழ்வு பணியாளா்கள் என பல்வேறு நிலையில் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சோ்ந்த 19 வட்டாரங்களில் 190 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா். அரசின் திட்டங்கள் குறித்து அறியாத கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாமக்கல் மாவட்டம் 19 அலகுகளாக பிரிக்கப்பட்டு, ஓா் அலகுக்கு 10 போ் வீதம் 190 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தப் பணியினை உணா்வுப்பூா்வமாகவும், உண்மைத் தன்மையுடனும், வெளிப்படையாகவும் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் இந்த சமூகத்தில் முழுமையாக வாழ்வதற்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்புகள், தேசிய அடையாள அட்டை, முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் வழங்குவதற்கு இது வாய்ப்பாக அமையும் என்றாா்.
இந்த பயிற்சியானது தொடா்ந்து மூன்று நாள்கள் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணியை செப்டம்பா் மாதத்துக்குள் முடிக்க களப் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்வில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா்கள், தொண்டு நிறுவன பணியாளா்கள், பயிற்சியாளா்கள் கலந்துகொண்டனா்.