``மிரட்டலுக்கு பயந்து தான் பங்கேற்கவில்லை..'' - மேடையில் குமுறிய கவர்னர்; ஊட்டி ராஜ்பவன் அப்டேட்ஸ்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரம் மட்டுமே முதலமைச்சருக்கு உண்டு. கவர்னரே வேந்தராக தொடர்வார் எனக்கூறி ஆளுநர் மாளிகை தரப்பில் துணை வேந்தர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த மாநாட்டிற்காக ஊட்டி ராஜ்பவனில் ஏற்பாடுகள் தீவிரமாக திட்டமிடப்பட்டிருந்தது.

திட்டமிட்டபடியே கவர்னர் ஆர்.என்.ரவி, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் ஆகியோரும் ஊட்டியை வந்தடைந்தனர். ஆனால், பல்கலைக்கழக துணை வேந்தர்கள் தான் கடைசி நேரத்தில் பின்வாங்கியிருக்கிறாரகள்.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பங்கேற்காத நிலையில், மத்திய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் மிரட்டலுக்கு பயந்து தான் மாநில அரசு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை என கவர்னர் பகிரங்க குற்றச்சாட்டை மேடையில் முன்வைத்து கோபம் கொப்பளித்துள்ளார்.
கவர்னரைத் தொடர்ந்து பேசிய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், " தேசிய கல்விக் கொள்கை என்பது அரசின் கல்விக் கொள்கை அல்ல நாட்டின் கல்விக் கொள்கையாகும்.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தேசிய கல்விக் கொள்கையை நன்கு ஆராய்ச்சி செய்து அதனை நடைமுறைப்படுத்த முன் வர வேண்டும்.
இந்த மாநாட்டில் துணைவேந்தர்கள் பலர் பங்கேற்காததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதனை கவர்னர் பெரிதாக எடுத்துக்கொண்டு வருத்தப்படத் தேவையில்லை" என ஆறுதல் கூறினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
