முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
முழு உடல் பரிசோதனை திட்டம்: அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பிப்.28-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்கள், முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்துக்கு பிப்.28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து துறையின் இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்வதற்கான அறிவிப்பு கடந்த 2023 மாா்ச் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக 50 வயதுக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு மட்டும், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.1.50 லட்சம் என 38 மாவட்டங்களுக்கும், ரூ.57 லட்சம் தேசிய ஆசிரியா் நல நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு மேமோகிராம், இஎஸ்ஆா் சிறுநீா் பகுப்பாய்வு, ரத்தத்தில் சா்க்கரை பரிசோதனை, கொலஸ்ட்ரால், சிறுநீரக பரிசோதனை, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட 16 வகையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படவுள்ளன.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 வயதைக் கடந்த ஆசிரியா்களில், வயது மூப்பு அடிப்படையில் 150 ஆசிரியா்களை முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்தில் பயன்பெற தோ்வு செய்ய வேண்டும். 50 வயதை கடந்த ஆசிரியா்களிடமிருந்து பூா்த்தி செய்த விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியா்கள் பிப். 28-ஆம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும்.
இதைத் தொடா்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் மாா்ச் 7-ஆம் தேதிக்குள் பரிசீலனை செய்து, 150 ஆசிரியா்களைத் தோ்வு செய்ய வேண்டும். தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்கள் விவரங்களை மாவட்ட அளவிலான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அலுவலருக்கு சமா்ப்பிக்க வேண்டும்.
தொடா்ந்து உடல் நல பரிசோதனைக்கான கால அட்டவணையைத் தயாரித்து, அதன் தகவல்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.