”முஸ்லிம்க்கு வீடு தரமாட்டேன்னு சொன்னாங்க...” - அறந்தாங்கி நிஷாவின் நெகிழ்ச்சிப் பதிவு
`கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் அறந்தாங்கி நிஷா. தனது பேச்சுத் திறமையால் ரசிகர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறார். தனுஷின் `மாரி 2' படம் மூலம் அறந்தாங்கி நிஷா சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார்.
அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் பங்கேற்ற இவர் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் சொந்த வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் நடத்தியுள்ள அறந்தாங்கி நிஷா, ஒரு நீண்ட பதிவையும் போட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.
அந்த பதிவில் ”உங்க எல்லாரோட ஆசிர்வாதத்தோட சென்னை வீடு பால் காய்ச்சியாச்சு .வீட்டுக்கு அப்பாவோட பெயர் தான் வச்சிருக்கேன், நான் பொறந்ததுல இருந்து இப்ப வரைக்கும் எனக்கு சென்னையில் சொந்தக்காரங்கன்னு யாரும் கிடையாது, சின்ன வயசுல ஒரு தடவை தான் அப்பா என்ன சென்னைக்கு கூட்டிட்டு வந்தாங்க, அதுக்கப்புறம் நான் எப்ப சென்னைனு சொன்னாலும் இந்தா கூட்டிட்டு போறேன் மா கூட்டிட்டு போறேன்னு என்னை எப்பவும் ஏமாத்திட்டே இருப்பாங்க, திரும்ப நான் சென்னையில பயணிக்கிறதுக்கு காரணம் என்னுடைய அப்பா,அதுக்கு அப்புறம் என்னுடைய தமிழ்,ஆறு மாசமா சென்னையில வீடு தேடுனப்போ ஆர்டிஸ்ட் வீடு தர மாட்டேன், முஸ்லிம்க்கு வீடு தர மாட்டேன் இப்படி எத்தனையோ விமர்சனங்களை சந்தித்ததுக்கு அப்புறம் குடும்பமா சேர்ந்து சென்னையில் ஒரு வீடு வாங்கிறலாம்னு முடிவு எடுத்து.
இப்போ வீடு வாங்கியாச்சு,எப்பவுமே எல்லாரும் முன்னாடியும் நம்ம ஜெயிக்கிறதை விட நம்ம எங்க தோக்குறமோ அங்கதாங்க ஜெயிக்கணும், என்னோட வெற்றிக்கு எப்பவுமே என்னுடைய குடும்பமும் என்னுடைய நண்பர்களும் என்னுடைய ரசிகர்களும் என்னுடைய தமிழும் தான் காரணம், எல்லாருக்குமே ரொம்ப நன்றி என்னுடைய வளர்ச்சியை உங்களுடைய வளர்ச்சியா பாக்குறதுக்கும்,என்னை எப்பவுமே உங்களில் ஒருத்தியா பார்க்கிறதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி”, என்று நெகிழ்ந்திருந்தார் அறந்தாங்கி நிஷா.