நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை
‘மோசம்..’ ஷங்கர் மீது கேம் சேஞ்சர் எடிட்டர் குற்றச்சாட்டு!
இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டர் பேசியுள்ளார்.
இந்தியாவிலும் பிரம்மாண்ட படங்கள் எடுக்கப்படுகின்றன என உலகிற்குக் காட்டிய இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். ஜெண்டில்மேன் மூலம் இயக்குநராக அறிமுகமானர், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என பல வெற்றிப்படங்கள் மூலம் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக வலம் வந்தார்.
எந்திரன், ஐ படங்களின் மூலம் தொழில்நுட்ப ரீதியாகவும் பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஆனால், சினிமாவில் எல்லா ஜாம்பவான்களுக்கும் மோசமான காலம் உண்டு என்பதுபோல் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தன் மார்க்கெட்டை இழந்திருக்கிறார்.
அடுத்ததாக, வேள் பாரி நாவலை அவர் திரைப்படமாக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது இயக்குநர் ஷங்கர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
ஒரு நேர்காணலில் பேசிய ஷமீர், “அன்பறிவு மாஸ்டர்கள் மூலம் கேம் சேஞ்சர் படத்தில் எடிட்டராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தை ஷங்கர் 7.30 மணி நேரப் படமாக என்னிடம் ஒப்படைத்தார். அதை 3 மணி நேரமாக மாற்ற நான் சென்னையிலேயே 350 நாள்கள் இருந்தேன். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் செலவிட்டு பின் அப்படத்திலிருந்து விலகினேன். ஷங்கருடன் பணியாற்றியது மிக மோசமான அனுபவமாகவே இருந்தது. ” எனக் கூறியிருக்கிறார்.
இதைக் கண்ட ரசிகர்கள், தயாரிப்பாளரின் பணத்தைக் கொஞ்சம்கூட மதிக்கத் தெரியாதவர் ஷங்கர் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எடிட்டர் ஷமீர் சார்லி, அங்கமாலி டயரீஸ், ஏஆர்எம், நேற்று (மே. 23) வெளியான நரிவேட்டை உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.
கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ஷமீர் முகமது விலகியதும், அப்படத்தின் எடிட்டராக ரூபன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஏன் நம்மால் ரூ. 1000 கோடி படங்களைக் கொடுக்க முடியவில்லை? மணிரத்னம் பதில்!