மோடி சீனா பயணம்: "நாடாளுமன்றத்தில் 'சீனா' என வாய் திறந்து மோடி பேசியதில்லை; ஆனால்" - சீறிய ஜோதிமணி
திண்டுக்கல் 12வது புத்தகத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கரூர் எம்பி ஜோதிமணி கலந்து கொண்டார்.
பின் ஜோதிமணி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "அமெரிக்காவின் 50% வரி விதிப்பு இந்தியா முழுவதும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். கரூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து அமெரிக்காவிற்கு மட்டும் 35% ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கரூர் ஆடை உற்பத்தியாளர்கள் அமெரிக்க ஏற்றுமதியில் ஏற்கனவே 25% மானியத்தில் பொருட்கள் வழங்கி வரும் நிலையில் கூடுதலாக 25% மானியம் கேட்கின்றனர். ஏற்கனவே மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி மற்றும் பண மதிப்பீட்டிலிருந்து இருந்து மீள முடியாமல் இருக்கிறோம்.
அமெரிக்கத் தேர்தலின் போது நரேந்திர மோடி டிரம்ப்-க்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். எந்த நாட்டின் பிரதமரும் மற்ற நாட்டிற்குப் பிரசாரம் செய்ய மாட்டார்கள். 50 சதவீத பெட்ரோலிய இறக்குமதியின் காரணமாகப் பயனடைவது பாஜக, அதானி மற்றும் நரேந்திர மோடி மட்டுமே. பாதிக்கப்படப் போவது சிறு குறு தொழில் செய்பவர்களே.
இந்தியாவின் பல பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்து வரும் நிலையில் மோடியின் சீனப்பயணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. சீன உதவியுடன் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூரில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியாவிற்கு எதிராக ஆலோசனை கொடுத்து ஆயுதங்கள் வழங்குகிற சீனாவிற்கு எதற்குப் போக வேண்டும்.
நாடாளுமன்றத்தில் சீனா என வாய் திறந்து மோடி பேசியது இல்லை. சீனாவைக் கண்டு பயப்படும் பிரதமராகவே நரேந்திர மோடி இருக்கிறார். பாஜக அரசு வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது. வாக்குத் திருட்டைத் தடுத்தால்தான் இந்தியாவிற்கு நல்லது. ஊழல்களுக்கு ஏற்கனவே வலுவான சட்டம் உள்ளது. ஆனால் இப்போது 30 நாட்கள் சிறையிலிருந்தால் பதவி பறிக்கப்படும் என்பது கருப்பு சட்டத்தைப் போன்றது.
இந்தச் சட்டத்தின் மூலம் 30 நாட்கள் யாரை வேண்டுமானாலும் சிறையில் வைக்கலாம். அமலாக்கத்துறை தமிழ்நாட்டிலேயேதான் இருக்கிறது. யார் வேண்டுமானாலும் பொய் வழக்குப் போட்டுவிட்டு 30 நாட்கள் சிறையில் வைத்து பதவியைப் பறிக்கலாம் என்பது காமெடியா?
இது போன்ற சட்டங்கள் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்கும் ராகுல் காந்தி, எம்.பிகள், எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எதிராகப் போராடியவர்களையும் பாதிக்கும். அமலாக்கத்துறை தமிழ்நாட்டிலேயே உட்கார்ந்து இருக்கிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களே அமலாக்கத்துறை அலுவலகமாகச் செயல்படுகிறது.

தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய கல்வி நிதி மறுக்கப்படுகிறது என்பதற்காகவே எம்பி சசிகாந்த் செந்தில் தொடர் உண்ணாவிரதத்திலிருந்து வருகிறார். விஜய் காங்கிரஸ் கட்சியைப் பேசுவதற்கு எதுவும் இல்லை. சாதாரண மனிதர்களுக்கு ஓட்டைக் கூட பாஜக திருடுகிறது. இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் 50 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் இல்லை" எனத் தெரிவித்தார்.