காங்கிரஸ் தலைவா்கள் மீது வழக்கு: மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!
யுனெஸ்கோ-வின் பதிவேட்டில் பகவத் கீதை: `ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்’ - பிரதமர் மோடி
உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்திற்கான உலகளாவிய விண்ட்ஹோக் பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் பட்டியலில், ஸ்ரீமத் பகவத் கீதை, பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் உள்ளிட்ட புதிதாக 74 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தன் எக்ஸ் பக்கத்தில், ``பாரதத்தின் நாகரிக பாரம்பரியத்திற்கான ஒரு வரலாற்று தருணம்! ஸ்ரீமத் பகவத் கீதை, பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் இப்போது யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
இந்த அங்கீகாரம் இந்தியாவின் நித்திய ஞானத்தையும், கலை மேதைமையையும் கொண்டாடுகிறது. இந்த காலத்தால் அழியாத படைப்புகள் இலக்கியப் பொக்கிஷங்களை விட மேலானவை. ஏற்கெனவே இந்த சர்வதேச பதிவேட்டில் நம் நாட்டிலிருந்து 14 கல்வெட்டுகள் உள்ளன." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை வரவேற்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ``உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம்! யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்திற்கும், வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்துள்ள உலகளாவிய அங்கீகாரமாகும். கீதையும் நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரிகத்தையும் உணர்வையும் வளர்த்து வந்துள்ளன. அவற்றின் நுண்ணறிவுத் திறம் உலகத்துக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.