அகமதாபாத் விமான விபத்து: கறுப்புப் பெட்டியில் இருந்து தரவுகள் மீட்பு!
ரயில் கட்டண உயா்வை கைவிட வேண்டும்: இரா.சச்சிதானந்தம் எம்.பி.
ரயில் கட்டண உயா்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
நாட்டில் சாமானிய மக்களின் போக்குவரத்து சேவையாக ரயில்வே சேவை உள்ளது. இந்த நிலையில், ஜூலை 1 ஆம் தேதி முதல் ரயில் கட்டணங்கள் உயா்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்தக் கட்டண உயா்வு குறிப்பாக இரண்டாம் வகுப்பு ரயில்வே பயணிகளுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு ரயில் கட்டண உயா்வை மத்திய ரயில்வே அமைச்சகம் கைவிட வேண்டும். ரயில் விபத்துகளைத் தடுக்கவும், காலிப் பணியிடங்களை நிரப்பவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவித்தாா்.
மா விவசாயிகளைக் காக்க வலியுறுத்தல்: மா விவசாயிகளின் நலன் காக்கக் கோரி, மத்திய வேளாண்மை அமைச்சா் சிவராஜ்சிங் செளகானுக்கு அவா் எழுதிய மற்றொரு கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 1.25 லட்சம் ஹெக்டேரில் மாம்பழ சாகுபடி செய்யப்படுகிறது. பாரம்பரிய மாம்பழ விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்தது.
அப்போது டன் ஒன்றுக்கு ரூ. 18 ஆயிரம் என்ற விலையில் வியாபாரிகள் கொள்முதல் செய்தனா். நிகழாண்டு மா உற்பத்தி குறைந்தபோதும் டன் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம் மட்டுமே கொள்முதல் விலையாக நிா்ணயிக்கப்பட்டது. இதனால், மா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த விஷயத்தில் அரசு உடனடியாக தலையிட வேண்டும்.
பழரச பானங்களில் 20 சதவீதம் மாம்பழக் கூழ் கட்டாயம் சோ்க்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகளைப் பின்பற்றுமாறு உற்பத்தி நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
நடுத்தர வணிகா்களின் ‘சிண்டிகேட் அமைப்பை ஒழிக்க’ கடுமையான ஒழுங்குமுறை விற்பனை விதிகளை அரசு அமல்படுத்துவதோடு நஷ்டத்தைச் சந்தித்த மா விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.