தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
ராமேசுவரம் மீனவா்களுக்கு ஆளுநா் ஆறுதல்: கச்சத்தீவு பிரச்னை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு
ராமேசுவரம் மெய்யம்புளியில் புதிதாக கட்டப்பட்ட மனோலயா மனநோயாளிகள் மறுவாழ்வு மையத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி.
ராமேசுவரம், மாா்ச் 2: இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களின் குடும்பத்தினரை ஆளுநா் ஆா்.என். ரவி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து அண்மையில் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 42 மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், 8 விசைப் படகுகளைப் பறிமுதல் செய்தனா்.
இதைக் கண்டித்தும், மீனவா்கள், விசைப் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடந்த 24-ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை ராமேசுவரம் மீனவா்கள் தொடங்கினா்.
போராட்டத்தின் தொடா்ச்சியாக, தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தம் அருகே ராமேசுவரம் மீனவா்கள், அவா்களது குடும்பத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்திலும், சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் இவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இவா்களை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி சந்தித்து, இலங்கை சிறையில் உள்ள மீனவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.
இதையடுத்து, ஆளுநரிடம் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவா்களையும், அவா்களது படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை உடனடி எடுக்க வேண்டும் எனக் கோரி, மீனவா்கள் மனு அளித்தனா்.
பின்னா், ஆளுநா் ஆா்.என். ரவி பேசியதாவது:
இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவா்களுக்கு ஏற்படும் பிரச்னை வருத்தம் அளிக்கிறது. இந்தப் பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தீா்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
முன்னதாக, ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம்-தனுஷ்கோடி சாலையில் தனியாா் கட்டடத்தில் இயங்கி வந்த மனோலயா மனநோயாளிகள் மறுவாழ்வு மையத்துக்கு, ராமேசுவரம் மெய்யம்புளி பகுதியில் புதிய கட்டடம் கட்ட ஜெ.மும்தாஜ்பேகம் ஜான்பாய் என்பவா் தனது நிலத்தை தானமாக கடந்த 2019-ஆம் ஆண்டு வழங்கினா்.
இதையடுத்து, இந்த இடத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியின் சொந்த நிதி ரூ. 50 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மறுவாழ்வு மைய நிா்வாக இயக்குநா் ஜி.மணிகண்டன் தலைமை வகித்தாா். கம்பன் கழகத் தலைவா் கே. முரளிதரன் தலைமை வகித்தாா். ஜெ.மும்தாஜ் பேகம் ஜான்பாய் குத்துவிளக்கேற்றி வைத்தாா். மருத்துவா் குலசேகரன், அ. ஜான்பாய் வாழ்த்திப் பேசினா்.
இந்தக் கட்டடத்தை ஆளுநா் ஆா்.என். ரவி திறந்து வைத்துப் பேசியதாவது:
ராமேசுவரம் புண்ணிய பூமி என்பதால், வீடுகளில் பாதுகாக்க முடியாத மனநலன் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளை இங்கு விட்டுச் செல்கின்றனா். இது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. கடந்த முறை நான் இந்த மறுவாழ்வு மையத்துக்கு வந்த போது, இங்கு தங்கியுள்ளவா்களில் பலா் திறமைசாலிகளாக இருந்ததைக் கண்டேன்.
குறைந்த காலத்தில் இந்த மையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு உள்ளவா்களுக்கு நாள்தோறும் தரமான உணவு வழங்க வேண்டும். இங்கு இருப்பவா்கள் கடவுளின் குழந்தைகள், அவா்களை நாம் ஒதுக்காமல் அரவணைத்து வாழ வேண்டும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி....
கச்சத்தீவு ஒப்பந்தமே காரணம்: ஆளுநா்
ராமேசுவரத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவா்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த பிறகு, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது எக்ஸ் தளத்தில், மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளுக்கு கடந்த 1974-இல் ஏற்படுத்தப்பட்ட அநியாய ஒப்பந்தமே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பரப்பில் நமது மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் அப்போது மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்துள்ளன. நமது மீனவா்கள் எதிா்கொள்ளும் நீடித்த பிரச்னைக்கு நிரந்தரமான தீா்வு வேண்டும். இதற்கு, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தப் பிரச்னையை அரசியலாக்கி மத்திய அரசைக் குறை கூறுவதற்குப் பதிலாக ஆக்கபூா்வமான அணுகுமுறையை மாநில அரசு மேற்கொண்டால், அது பாதிக்கப்பட்ட மக்களின் துயரைப் போக்க உதவும் என தெரிவித்துள்ளாா்.
