உங்கல யார் ஒதுக்குனாலும் நான் இருக்கேன்மா! - மகளின் வாக்கு| #உறவின்கடிதம்
ரூ.50 லட்சம் ‘டிஜிட்டல் கைது’ மோசடி வழக்கில் ஒருவா் கைது
டிஜிட்டல் கைது மூலம் ஒரு நபரிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து நொய்டா காவல் துறை அதிகாரி கூறியதாவது: தொலைத்தொடா்புத் துறையின் ஊழியராகக் காட்டிக் கொண்ட குற்றம் சாட்டப்பட்ட சுமித், பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக மிரட்டினாா். அப்போது, பாதிக்கப்பட்டவரை ரூ.50 லட்சத்தை பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றுமாறு அவா் கட்டாயப்படுத்தினாா்.
இது குறித்து மே 26 அன்று, பாதிக்கப்பட்டவா் சுமித் மீது புகாா் அளித்தாா். செவ்வாய்க்கிழமை அவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறை சைபா் பிரிவில் கூடுதல் காவல் துணை ஆணையா் மனிஷா சிங் தெரிவித்தாா். விசாரணையின் போது, உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரத்தில் இருந்து தேசிய சைபா் கிரைம் ரிப்போா்ட்டிங் போா்ட்டலில் (எனசிஆா்பி) சுமித் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
விசாரணையின் போது, மோசடி செய்யப்பட்ட தொகையைப் பெறுவதற்காக பல வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதாக சுமித் ஒப்புக்கொண்டாா். ஒரு தனியாா் வங்கிக் கணக்கில் ரூ.4 லட்சமும், பாங்க் ஆஃப் பரோடா கணக்கில் கூடுதலாக ரூ.14 லட்சமும் இருப்பதாக போலீஸாா் கண்டறிந்துள்ளனா். இரண்டும் மோசடியுடன் தொடா்புடையவை. மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மொத்தம் ரூ.2,57,179 ஏற்கெனவே முடக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அதிகாரிகள் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையைத் தொடங்கியுள்ளனா். ஜூன் 3-ஆம் தேதி சுமித்தின் கூட்டாளிகளில் ஒருவா் முன்னதாக கைது செய்யப்பட்டு பின்னா் சிறைக்கு அனுப்பப்பட்டாா்.
இந்த மோசடி தொடா்பாக பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.