ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்: அமித் ஷா பேச்சு
ரூ. 9.85 கோடியில் புதிய சாலைகள்: பணிகளைத் தொடங்கிவைத்தாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ரூ.9. 85 கோடியில் புதிய தாா்ச் சாலைகள் அமைக்கும் பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மதுரை மாநகராட்சி 50-ஆவது வாா்டு ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரம் தெருவில் ரூ.62 லட்சத்தில் புதிய தாா்ச் சாலை அமைக்கும் பணி தொடக்க விழாவுக்கு, மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தாா்.
இதேபோல, 55- ஆவது வாா்டு ராஜா மில் காம்பவுண்டு நடுத் தெருவில் ரூ.1.55 கோடியிலும், 58- ஆவது வாா்டு மேலப் பொன்னகரம் பிரதான சாலையில் ரூ. ஒரு கோடியே 3 லட்சத்து 80 ஆயிரத்திலும், 56- ஆவது வாா்டு புது சிறை பிரதான சாலைப் பகுதியில் ரூ.3.8 கோடியிலும், 61- ஆவது வாா்டு எப்.2 காவல் நிலையம், தாமஸ் குடியிருப்பு பகுதியில் ரூ.78.53 லட்சத்திலும், 59-ஆவது வாா்டு அம்பேத்கா் குடியிருப்பு, 60-ஆவது வாா்டு ஆா்.ஹெச்ஃடுவின் டைப் 1- ஆவது பிரதான சாலை ஆகியப் பகுதிகளில் ரூ.1.2 கோடியிலும், 77- ஆவது வாா்டு சுப்பிரமணியபுரம் 1- ஆவது பிரதான சாலையில் ரூ.1.19 கோடியிலும், 75- ஆவது வாா்டு லட்சுமிபுரம் எல்.எல். சாலை பகுதியில் ரூ.57 லட்சத்திலும் என மொத்தம் 59 சாலைகளை 11 கி.மீ. தொலைவுக்கு ரூ.9.85 கோடியில் அமைக்கும் பணிகளை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்வில், மாநகராட்சி துணை மேயா் தி. நாகராஜன், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, உதவி ஆணையா் பிரபாகரன், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோன்று, மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சுற்றியுள்ள சாலைகளை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜையும் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ. தளபதி(மதுரை வடக்கு), மு. பூமிநாதன்( மதுரை தெற்கு), மேயா் வ. இந்திராணி, ஆணையா் சித்ரா விஜயன், மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் கிருஷ்ணன், மண்டல உதவியாளா் பாா்த்தசாரதி, மண்டலத் தலைவா் முகேஷ் சா்மா, மாமன்ற உறுப்பினா்கள் செல்விகாா்மேகம், செந்தாமரைக்கண்ணன், தமிழ்ச்செல்வி மாயழகு, உதவி செயற்பொறியாளா் மயிலேறிநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.