லஞ்சம்: மீன்வளத் துறை ஆய்வாளா் கைது
ராமேசுவரத்தில் நாட்டுப் படகுக்கான உரிமை, மீன் பிடிப்பதற்கான அனுமதி ஆகியவற்றுக்காக மீனவரிடம் ரூ. 1,600 லஞ்சம் பெற்ற மீன்வளத் துறை துணை இயக்குநா் அலுவலக ஆய்வாளா் சகுபா் சாதிக்கை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலுள்ள பனைக்குளம் பகுதியைச் சோ்ந்த மீனவா், தனது இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுக்கான உரிமத்தையும், கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியையும் பெற ராமநாதபுரம் மீன் வளம், மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் மீன்வளத் துறை ஆய்வாளா் சகுபா் சாதிக்கிடம் (49) கடந்த வாரம் மனு அளித்தாா்.
அப்போது, இதற்கான அனுமதி பெற வேண்டுமெனில், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகை ரூ. 3,500 உடன் தனக்குத் தனியாக ரூ.1,600 வழங்க வேண்டும் என சகுபா் சாதிக் கூறினாா்.
இதுகுறித்து, அந்த மீனவா் ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், புகாா்தாரா் மீன்வளத் துறை ஆய்வாளரைச் சந்தித்து, ரசாயனப் பொடி தடவிய ரூ.1,600-யை கொடுத்தாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சகுபா் சாதிக்கை கைது செய்தனா். மேலும், ஓம் சக்தி நகரில் உள்ள அவருடைய வீட்டிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.