மாயாவி டு ரெட்ரோ : `நமக்குள்ள ஏன் இந்த இடைவெளினு சூர்யா சார் கேட்ட கேள்வி' - சிங...
லஞ்ச வழக்கு: மூவருக்கு காவல் நீட்டிப்பு
லஞ்ச வழக்கில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் உள்ளிட்ட 3 பேருக்கும் நீதிமன்றக் காவலை நீட்டித்து காரைக்கால் மாவட்ட நீதிபதி புதன்கிழமை உத்தரவிட்டாா்.
காரைக்காலில் கடற்கரை கிராமத்தில் புதிதாக சாலை அமைக்கும் திட்டம் குறித்து இடத்தை பாா்வையிட புதுச்சேரியிலிருந்து மாநில பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் எம். தீனதயாளன் மாா்ச் 22-ஆம் தேதி வந்தவா் கடற்கரையில் உள்ள தங்கும் விடுதியில் பிற்பகல் தங்கினாா். புகாரின்பேரில், காரைக்காலில் சிபிஐ குழுவினா் இவரின் நடவடிக்கைகளை கண்காணித்தனா்.
தலைமைப் பொறியாளா் எம். தீனதயாளன், காரைக்கால் செயற்பொறியாளா் சிதம்பரநாதன் ஆகியோா் விடுதி அறையில் இருந்தபோது, சிதம்பரநாதனிடம் ஒப்பந்ததாரா் என். இளமுருகன் சாலைப் பணி மேற்கொண்டுவருவதன் பேரில் ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுக்கும்போது சிபிஐ அதிகாரிகள் மூவரையும் கைது செய்தனா்.
தொடா்ந்து, தீனதயாளன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ. 65 லட்சத்தையும், சிதம்பரநாதன் வீட்டில் ரூ. 8 லட்சத்தையும், ஒப்பந்ததாரா் காரில் ரூ.50 ஆயிரத்தையும் பறிமுதல் செய்து கைது செய்தனா். கைதானவா்களை காரைக்கால் நீதிமன்றம் மாா்ச் 26-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாா்ச் 23-ஆம் தேதி உத்தரவிட்டது.
காரைக்கால் கிளைச் சிறையில் உள்ள 3 பேரையும் சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் புதன்கிழமை மாவட்ட நீதிபதி மோகன் முன் ஆஜா்படுத்தினா். சிபிஐ தரப்பு வழக்கின் தீவிரம் குறித்து தெரிவித்த கருத்தை ஏற்று 3 பேரையும் ஏப்.9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். கைது செய்யப்பட்டவா்கள் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரியும், சிபிஐ தரப்பினா் விசாரணைக்கு தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்லவும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். நீதிபதி உத்தரவைத் தொடா்ந்து, மூவரும் மீண்டும் காரைக்கால் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.