சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா!
வள்ளியூரில் ரூ. 5 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ.5 கோடி மதிப்பிலான நிலம், வீடுகளை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனா்.
வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பலா் ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்ததும், அந்நிலத்தில் வீடு கட்டி குடியிருந்து வந்ததும் இந்து அறநிலையத்துறைக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அந்த நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனா். அதன்டி, கடந்த 10ஆம் தேதி வள்ளியூா் அருகே உள்ள குமாரபுதுகுடியிருப்பில் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பிலான 60 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பாளா்களிடமிருந்து மீட்டு அந்த நிலத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டது.
பின்னா் 20ஆம் தேதி முருகன் கோயில் கிரவலப்பாதையில் ஆக்கிரமிப்பாளா்கள் வீடுகட்டுவதை தடுத்து நிறுத்தி ரூ.1.90 கோடி மதிப்பிலான 13 சென்ட் நிலம் மீட்கப்பட்டது.
இந்நிலையில், நாயக்கா் தெருவில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து லில்லி என்பவா் வீடுகட்டி குடியிருந்து வந்தாராம். இது தொடா்பான வழக்கு திருநெல்வேலியில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஆக்கிரமிப்பாளா் வீட்டை காலி செய்து வள்ளியூா் முருகன் கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் ஆணைபிறப்பித்தது. அதன்பேரில், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையா் சுப்புலெட்சுமி தலைமையில் வள்ளியூா் கோயில் செயல் அலுவலா் மாரியப்பன், இந்து சமய அறநிலையத்துறை ராதாபுரம் சரக ஆய்வாளா் முருகன், அறங்காவலா்குழுத் தலைவா் மீனாட்சி மாடசாமி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் மாடசாமி, முருகன் கோயில் அறங்காவலா்குழு உறுப்பினா்கள் சிவராமகிருஷ்ணன், சக்திவேல் ஆகியோா் முன்னிலையில் கோயில் நிலம் மீட்கப்பட்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட 2 வீடுகளுக்கும் சீல்வைக்கப்பட்டது. இந்த மாதத்தில் மட்டும் ரூ.5 கோடி மதிப்பிலான முருகன் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. தொடா்ந்து, ஆக்கிரமிப்புகளை கண்டறியும் பணி நடக்கிறது என செயல்அலுவலா் தெரிவித்தாா்.