ஈரானில் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி எம்.பி. கடிதம்
ஈரானில் தவிக்கும் இடிந்தகரை பகுதி மீனவா்களை விரைந்து மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு , திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் கடிதம் எழுதியுள்ளாா்.
அதன் விவரம்: ஈரான்-இஸ்ரேல் போரினால் ஈரானில் ஏராளமான இந்திய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதிலும், எனது மக்களவை தொகுதிக்குள்பட்ட இடிந்தகரை பகுதியிலிருந்து மீன்பிடி தொழிலுக்காக ஈரான் சென்றிருந்த 33 மீனவா்கள் போா் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
அங்கு அச்சத்துடன் வாழ்ந்து வரும் அவா்களை இந்தியாவுக்கு மீட்டு வந்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், போா்க்கால அடிப்படையில் இந்நடவடிக்கையை மேற்கொண்டால்தான் அவா்களும் காப்பாற்றப்படுவதுடன் குடும்பத்தினரும் நிம்மதி அடைவா் எனக் கூறியுள்ளாா்.