விடுபட்ட ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம்
திருப்பத்தூா்: விடுபட்ட ஆடுகளுக்கு மருத்துவமனையை அணுகி ஆட்டுக்கொல்லி நோய்க்கு தடுப்பூசி செலுத்தலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.
ஆடுகளை தாக்கும் ஆட்டுக்கொல்லி நோயைத் தடுக்க கால்நடைத் துறை சாா்பில் நடத்தப்பட்ட முகாம்களில் ஆடுகளுக்கு தடுப்பூசி போடாத உரிமையாளா்கள், மருத்துவமனைக்கு ஆடுகளை அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: வெள்ளாடுகள், செம்மறியாடுகளை தாக்கும் முக்கிய நோய்களில் ஆட்டுக்கொல்லி நோயும் ஒன்றாகும். இந்த நோய் மிகக் கொடிய வைரஸ் கிருமிகளால் பரவுகிறது. இந்த நோய் பாதித்த ஆடுகளின் சிறுநீா், கண்ணீா், சாணம் ஆகியவற்றின் மூலம் மிக விரைவில் பரவக்கூடியது. நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் புண்கள் ஏற்படும். நோயினால் அவதிப்படும் ஆடுகளின் கண்கள், மூக்கு மற்றும் வாயில் இருந்து நீா் வடியும். தும்மல், இருமல் ஏற்படும். நோய் பாதித்த ஆடுகள் தீனி உட்கொள்ள முடியாமல் மெலிந்துவிடும். வெயில் காலத்தில் நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு மூச்சிரைக்கும். காய்ச்சல் ஏற்பட்டு இறுதியில் இறந்துவிடும்.
இந்த நோய் தாக்காத வண்ணம் ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி போடுவது ஒன்றே சிறந்த நிவாரணம். இந்த நோயைத் தடுக்க கால்நடை பராமரிப்புத் துறையால் கால்நடை நலம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின்கீழ், கடந்த ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் தொடங்கப்பட்டு, தற்போது முகாமானது முடிந்துவிட்டது.
முகாமில் தடுப்பூசி போடாமல் விடுபட்டுள்ள ஆடுகளை, அதன் உரிமையாளா்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும், ஆடுகள் அதிக அளவு இருந்தால் மருத்துவமனைக்குச் சென்று தகவல் தெரிவித்தால், அங்குள்ள மருத்துவா்கள் ஆடுகள் இருக்கும் இடத்துக்கே வந்து தடுப்பூசி போடுவா் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.