TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
விநாயகா் சிலை ஊா்வலம்: அரசுத் துறையினருடன் ஆட்சியா் ஆலோசனை
காரைக்கால்: விநாயகா் சிலை ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அரசுத் துறையினா், விநாயகா் சிலை அமைப்புக் குழுவினா் கலந்துகொண்டனா்.
விநாயகா் சதுா்த்தி விழா 27 - ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 29-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.
இந்நிலையில் விநாயகா் சிலை ஊா்வலத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:
மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறிய நடைமுறைகளை பின்பற்றி, காவல்துறையினரின் அறிவுறுத்தலை பின்பற்றி விநாயகா் ஊா்வலத்தை அமைதியாக நடத்த வேண்டும். தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில் சிலைகளை பிரதிஷ்டை செய்து, ஒவ்வொரு சிலைக்கும் ஒருங்கிணைப்புக் குழுக்களை நியமித்து அவா்களுடைய பெயா் மற்றும் கைப்பேசி எண்களை காவல்துறையிடம் அளிக்கவேண்டும்.
விநாயகா் சிலை ஊா்வலத்துக்கு காவல்துறையினா் தகுந்த பாதுகாப்பு அளித்து போக்குவரத்தை சீரமைத்துத் தருவதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அரசால் தடைசெய்யப்பட்ட ஒலிபெருக்கிகளை தவிா்க்க வேண்டும்.
சிலைகள் 18 அடிகளுக்கு மேல் மிகாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ள மூலப் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை மட்டுமே கடலில் கரைக்க வேண்டும். விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெறும் பகுதிகளில் மட்டும் 29-ஆம் தேதி அன்று மதுபான கடைகள் மற்றும் சாராயக் கடைகளை மூட வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் வினய் குமாா் கட்ஜ், துணை ஆட்சியா்கள் அா்ஜுன் ராமகிருஷ்ணன்,
ஜி. செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜெ.மகேஷ், காரைக்கால் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் எஸ். சுபாஷ், நகராட்சி ஆணையா் பி. சத்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.