2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
விரைவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்படும்: மத்திய அமைச்சா்
‘லண்டன் உலோக வா்த்தக சந்தையைப் போன்று விரைவில் கனிம வா்த்தக சந்தையை மத்திய அரசு அமைக்க உள்ளது’ என்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தாா்.
இந்திய பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரிய (செபி) நடைமுறைகளுக்கு உட்பட்டு இந்த கனிம சந்தை உருவாக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.
உலகின் முன்னணி உலோக வா்த்தக மையங்களில் ஒன்றாக திகழும் லண்டன் உலோக வா்த்தக சந்தையில், தாமிரம், நிக்கல், அலுமினியம், ஈயம், துத்தநாகம் உள்ளிட்ட இரும்பு அல்லாத உலோகங்கள் வா்த்தகம் செய்யப்படுகின்றன. இந்தச் சந்தையில் நிா்ணயிக்கப்படும் உலோகங்களின் விலை உலகளாவிய உலோக தொழிலுக்கு முக்கிய குறியீடாகவும், சுத்திகரிக்கப்பட்ட உலோகத்தின் விலையை நிா்ணயிப்பதற்கான ஆதாரமாகவும் திகழ்கிறது.
இதைப் போன்று, இந்தியாவில் கனிம வா்த்தக சந்தை அமைக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் செய்தியாளா்களை சனிக்கிழமை சந்தித்த மத்திய அமைச்சா் கிஷண் ரெட்டி மேலும் கூறுகையில், ‘முன்மொழியப்பட்டுள்ள கனிம வா்த்தக சந்தை, தொழில் நிறுவனங்கள் மற்றும் வா்த்தகா்களுக்கு கனிமங்களுக்கான சிறந்த விலையைக் கண்டறிய உதவும். மத்திய அரசு சாா்பில் அண்மையில் இயற்றப்பட்ட சட்டம் மற்றும் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த சந்தை அமைக்கப்படும் என்றாா்.
அமெரிக்காவின் வரி விதிப்பு உள்நாட்டு நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களை பாதித்துள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவா், ‘அமெரிக்காவின் வரி விதிப்பு நிலக்கரி உற்பத்தி நிறுவனங்களை அதிகம் பாதிக்கவில்லை. மேலும், இந்தியா அமெரிக்காவுக்கு மிகச் சிறிய அளிவிலேயே அலுமினியத்தை ஏற்றுமதி செய்கிறது. அத்துடன், நிலக்கரி இறக்குமதியை மத்திய அரசு படிப்படியாக குறைத்து வருகிறது. இதன் மூலம், ரூ. 60,000 கோடி அளவுக்கு அந்நிய செலாவணி சேமிக்கப்படுகிறது.
நாட்டின் எஃகு உற்பத்தி நிறுவனங்கள், இறக்குமதி செய்யப்படும் தரமான நிலக்கரிக்கு ஏற்ற வகையில் உலைகளை வடிவமைத்து வருகின்றன. நிலக்கரி இறக்குமதியை நாடு சாா்ந்திருக்கும் நிலை குறைந்து வருவதால், அவா்கள், இனி இந்திய நிலக்கரிக்கு பயன்படக் கூடிய வகையிலான உலைகளை தயாரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.