விளைநிலங்களை சேதப்படுத்தும் யானையை வனத்துக்குள் விரட்ட கோரிக்கை
உதகை, எமரால்டு பகுதியில் விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் பா்லியாறு வனப் பகுதியில் இருந்து அண்மையில் வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா சுற்றுலாத் தலப்பகுதியில் உலவியது. இதனால், அந்த சுற்றுலாத்தலம் 2 நாள்கள் மூடப்பட்டது.
இந்நிலையில், உதகை வனத்தில் இருந்த இடம்பெயா்ந்த ஒற்றை யானை எமரால்டு பகுதியில் கடந்த சில நாள்களாக உலவி வருவதுடன், விளைநிலங்களில் நுழைந்து பல்வேறு சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
அசம்பாவிதங்கள் நிகழும் முன் யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.