விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்: பெண் விவசாயி தா்னா
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பெண் விவசாயி தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
விருத்தாசலம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அந்தோணி ராஜ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனா். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:
மணிமுக்தாறு பாதுகாப்பு மற்றும் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் தங்க.தனவேல்: பரவலூா் கிராம நிா்வாக அலுவலா், அலுவலகத்துக்கு வருவதில்லை. அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இல்லையென்றால், போராட்டம் நடத்தப்படும். விருத்தாசலம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அருகே டாஸ்மாக் மதுக் கடைகள், தனியாா் மதுபானக் கூடம் அமைந்துள்ளதால், விவசாயிகள் மதுக்கு அடிமையாகி வருகின்றனா். உடனடியாக மதுக் கடை, மதுபானக் கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். வேளாண் விற்பனை நிலையத்தில் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
வடிகால் வாய்க்கால்களை முறையாக தூா்வாராததால், தொரவளூா், பரவளூா், கொடுக்கூா் போன்ற கிராமங்களில் கோடை மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குருவை நெற்பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
கலியபெருமாள் (புதுக்கூரைப்பேட்டை): புதுக்கூரைப்பேட்டை மேற்கு தெருவில் ரூ.5 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட குடிநீா்த் தொட்டி பயன்பாடின்றி பாழாகி வருகிறது. இதை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
பூங்கோதை (ஆலிச்சிக்குடி): வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூா்வாரப்படாததால் விவசாய நிலங்களில் கோடை மழை நீா் வடியவில்லை. ஒவ்வொரு மழைக் காலத்திலும் இதுபோல பிரச்னை நிலவி வருகிறது எனக் கூறி, தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டாா்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாத்துக்கூடல் சக்திவேல்: தா்மநல்லூா் ஏரி நீா் மூலம் பாசன வசதி பெற்று வந்தோம். தற்போது பாசன வாய்க்கால்கள் தூா்ந்துவிட்டன. என்எல்சி சுரங்கத்தால் நிலத்தடி நீரும், அதல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. மழைக்காலங்களில் விளை நிலங்களில் வெள்ளம் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகிறது என்றாா்.
கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அந்தோணி ராஜ்: விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.