வேலூர்: விஐடி அருகில் குண்டும் குழியுமான சாலை... மக்களின் கோபமும் மாநகராட்சியின் விளக்கமும் என்ன?
வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் விஐடி பல்கலைக்கழகத்தின் மெயின் பிளாக் கட்டடங்கள் அமைந்துள்ளன. இந்த மெயின் பிளாக் கட்டடத்தின் அருகிலேயே இருக்கும் அரசு உள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்லும் சாலையானது மிகவும் சேதம் அடைந்துள்ளது. இந்த சாலையில் பயணிக்க முடியாதபடி பள்ளங்களுடன் மண் சாலை போன்று காட்சியளிக்கின்றது.
மழைக் காலங்களில் சேரும் சகதியுமாக மாறி இந்த சாலையில் பயணிக்க முடியாதபடி இருப்பதாக இந்த சாலையைப் பயன்படுத்தும் பொது மக்கள் கூறுகின்றனர். இந்த சாலை வேலூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த சாலையின் அருகிலேயே காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் அமைந்துள்ளது. இந்த சாலை அரசு உள் விளையாட்டு அரங்கத்தை வேலூர் நகரத்துடன் இணைக்கின்றது. அரசு உள் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் அமைந்துள்ளது. எனவே இந்த சாலையை முன்னாள் ராணுவ வீரர்களும், விளையாட்டு வீரர்களும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் வேலூர் விஐடி இந்தியன் வங்கி கிளையும் இந்த சாலையின் அருகில்தான் அமைந்துள்ளது. எனவே இந்த சாலை எப்போதும் மிகவும் பரபரப்பாகக் காட்சியளிக்கிறது.
இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை இந்த சாலையைப் பயன்படுத்துவதால் எப்போதும் பரபரப்பாகவே இந்த சாலை காட்சியளிக்கிறது.
இது குறித்துப் பேசிய காட்பாடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், “இந்த சாலை கடந்த 5 வருஷமா இப்படிதான் இருக்கிறது. நாங்களும் சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லிப் பார்த்தோம். ஆனால் அவர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்ற பிறகும் எந்த பயனும் இல்லை. அவர்கள் ரோடு போடுகிற மாதிரி தெரியவில்லை. கடந்த 5 வருஷமாக நான் இந்த சாலையைப் பயன்படுத்துகிறேன்.
கடந்த 5 வருஷமாக இந்த சாலையின் நிலை மாறாமல் அப்படியே தான் இருக்கிறது. முன்னாள் ராணுவ வீரர்கள் ஓய்வூதியதாரர்கள் என வயதானவர்கள் கூட இந்த சாலையைப் பயன்படுத்துகின்றனர். எனவே அவர்களாவது பாதுகாப்பாகச் சென்று வர இந்த சாலையைச் சீரமைக்க வேண்டும். புதிதாக விளையாட்டு மைதானம் காட்டியுள்ளனர். ஆனால் அந்த மைதானம் வந்த பிறகும் கூட இந்த சாலையின் நிலை மாறவில்லை” என்றார்.
இந்த சாலை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்த சாலை எப்போது சீரமைக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையரிடம் கேட்டிருந்தோம். இதுகுறித்து கூறிய அவர், “சாலையின் அருகில் பாதாளச் சாக்கடை பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த சாலையின் நடுவில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக பைப்லைன் அமைக்கும் பணி இன்னும் நிலுவையில் உள்ளன. அந்தப் பணிகளை நாங்கள் தொடங்கி முடிக்க இருக்கிறோம்.
மேலும் ரயில்வே கிராசிங் ஒன்று உள்ளதால் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஒரு உயர்மட்ட மேம்பாலம் வர இருப்பதாகக் கூறுகின்றனர். அந்த மேம்பாலம் வந்தால் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகளின் பைப்லைன் மாற்றியமைக்க வேண்டியதாக இருக்கும். எனவே நெடுஞ்சாலைத் துறையின் ஒப்புதலுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் அந்த உயர் மட்ட மேம்பாலப் பணிகள் குறித்துக் கூறியவுடன் இந்த சாலையின் சீரமைப்புப் பணிகளை விரைவில் தொடங்குகிறோம்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs