வளையல் விற்பனை முதல் மதம் மாற்றம் செய்தது வரை... கிராமத் தலைவரின் வங்கிக் கணக்கி...
‘வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனைத்துத் துறைகளும் பயன்பாட்டுக்கு வரும்’
வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் ரூ.48 கோடியில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்துத் துறைகளும் பயன்பாட்டுக்கு வரும் என்று வேலூா் எம்எல்ஏ ப.காா்த்திகேயன் தெரிவித்தாா்.
வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்டு ஜூன் 25-ஆம் தேதி முதல்வரால் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் தற்போது வரை மூன்று பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டு ஒரே வாரத்தில் மூடப்பட்டிருப்பதாகவும், உடனடியாக மருத்துவமனையைத் திறந்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் குற்றஞ்சாட்டி அதிமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்த அறிவித்துள்ளனா்.
இந்நிலையில், இந்த மருத்துவமனையில் வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டதுடன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் மு.ரோகிணிதேவி, மருத்துவா்களிடம் சிகிச்சை பிரிவுகள் குறித்து கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் கூறியது: வேலூா் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனையில் வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளைச் சோ்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனா்.
நான் முதல்முறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி ஏற்றபோது அப்போதைய முதல்வா் ஜெயலலிதா, சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், பின்னா் வந்த முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் இந்த மருத்துவமனையை தரம் உயா்த்த கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதிமுக ஆட்சியில் அதை கண்டுகொள்ளவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டப்பேரவையில் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முதல்வா் மு.க.ஸ்டாலின், உடனடியாக நிதி ஒதுக்கி மருத்துவமனை பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்தி கட்டிக்கொடுத்து கடந்த 25-ஆம் தேதி திறந்து வைத்தாா்.
அதன்பிறகு, தற்போது வரை இங்கு 660 நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா். காட்பாடி, சத்துவாச்சாரி, கொணவட்டம் உள்பட பல பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா்.
மருத்துவமனையில் ரூ.48 கோடியில் நவீன உபகரணங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. படிப்படியாக அனைத்துத் துறைகளும் பயன்பாட்டுக்கு வரும். தேவையில்லாமல் அதிமுகவினா் குற்றஞ்சாட்டுகின்றனா்.
ஏழைகள் தனியாா் மருத்துவமனையில் அதிக செலவு செய்து சிகிச்சை பெற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டே முதல்வா் இந்த மருத்துவமனையை கொண்டு வந்தாா் என்றாா். மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், மண்டலக் குழு தலைவா்கள் நரேந்திரன், யூசுப்கான் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.