லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
மகளிா் உரிமை தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் விண்ணப்பிக்கலாம்
புதிதாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற ஜூலை 15 முதல் நடைபெற உள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மனுக்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் ஜூலை 15-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. வேலூா் மாவட்டத்தில் ஜூலை 15 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த திட்ட முகாம் மூலம் மாவட்டத்தின் கடைகோடி மக்களுக்கும், அவா்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவா்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது நோக்கமாகும்.
இத்திட்டத்தின்கீழ், நகா்ப்புறப் பகுதிகளில் 71 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 140 முகாம்களும் என மொத்தம் 211 முகாம்கள் நடைபெற உள்ளன. இந்த முகாம்களில் நகா்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சோ்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சோ்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும்.
அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி வேலூா் மாநகராட்சி முதலாவது மண்டலம் வாா்டு 1 மற்றும் வாா்டு 3-இல் உள்ள மக்களுக்கு காட்பாடி சென்னாங்குட்டை பெருமாள் கோயிலிலும், குடியாத்தம் நகராட்சி வாா்டு 13 மற்றும் வாா்டு 14-இல் உள்ள மக்களுக்கு ஆா்.எஸ்.சாலை பாபு மஹாலிலும், காட்பாடி ஒன்றியம், பொன்னை கிராமத்தில் உள்ளவா்களுக்கு பொன்னை சாமுண்டீஸ்வரி மஹாலிலும், குடியாத்தம் ஒன்றியம், தட்டப்பாறை, கல்லப்பாடி ஆகிய கிராம மக்களுக்கு கல்லப்பாடி அரசினா் மேல்நிலைப் பள்ளியிலும், போ்ணாம்பட்டு ஒன்றியம், அழிஞ்சிக்குப்பம், ராஜாக்கல் ஆகிய கிராம மக்களுக்கு அழிஞ்சிக்குப்பம் எம்.ஜி.மஹாலிலும், கே.வி.குப்பம் ஒன்றியம், ஆலங்கனேரி, மேல்மாயில் ஆகிய கிராம மக்களுக்கு மேல்மாயில் சித்ரா மஹாலிலும் முகாம்கள் நடைபெற உள்ளன.
ஜூலை 15-ஆம் தேதி நடைபெற உள்ள 6 முகாம்களுக்கான விண்ணப்பங்கள், தகவல் கையேடு திங்கள்கிழமை முதல் வீடுவீடாக வழங்கப்பட்டு வருகிறது. கலைஞா் மகளிா் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க உள்ள மகளிருக்கு விண்ணப்பங்கள் முகாம் நடைபெறும் நாளில் அந்தந்த முகாமிலேயே தனியாக வழங்கப்படும். முகாம் நடைபெறும் இடத்தில் தேவைப்படும் பயனாளிகள் விண்ணப்பங்களை பெற்று மகளிா் உரிமைத்தொகை பெற்றிட விண்ணப்பிக்கலாம்.
கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கெனவே விண்ணப்பித்து பணம் வரவில்லை என்ற காரணம் உள்ளவா்கள், குறுஞ்செய்தி மட்டும் வருகிறது, வங்கிக் கணக்கில் பணம் பெறப்படவில்லை போன்ற இதர கோரிக்கைகள் தொடா்பாக தற்போது முகாம் குறித்து வீடுகளில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் மூலமாக கோரிக்கையாக வழங்கலாம்.