உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
வேளாண் வளா்ச்சித் திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிராம ஊராட்சிகளில் ஒட்டுமொத்த வேளாண் வளா்ச்சிப் பெற்று, தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றும் வகையில் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவரவும், வேளாண் உழவா் நலத் துறை சாா்பில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் கடந்த 2021-22ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
நிகழாண்டு இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக இணைந்து குறைந்தபட்சம் 10 ஏக்கா் தரிசு நிலத்தை தொகுப்பாக ஏற்படுத்தி, அந்தத் தொகுப்பில் நீா் ஆதாரங்கள் மற்றும் நுண்ணீா்ப் பாசனம் அமைத்து சாகுபடிக்கு கொண்டுவர இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தரிசாக உள்ள தனிப்பட்ட விவசாயிகளின் நிலத்தில் இருக்கும் முள்புதா்களை அகற்றி நிலத்தை சமன்செய்து உழுவதற்கு ஹெக்டோ் ஒன்றுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது ரூ. 9,600 மானியமாக வழங்கப்படுகிறது. வரப்புகளில் பயறு சாகுபடியை ஊக்குவிப்பதற்காக ஹெக்டேருக்கு 5 கிலோ பயறு விதைகளுக்கு 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது.
விசைத் தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் 50 சதவீத மானியத்தில் (அதிகபட்சமாக ரூ.3000) வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.