திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பி...
ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ரங்கா ரங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதற்காக அதிகாலை 3.30 மணிக்கு வெள்ளி பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள் கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். பின்னர், தங்க கொடி மரத்தில் உள்ள கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு, இன்று காலை மேஷலக்னத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றம் செய்யப்பட்டது.
சித்திரை தேர் திருவிழா உற்சவம் 11 நாள்கள் நடைபெற உள்ளது. அதில் முக்கிய நிகழ்வுகளாக 21 ஆம் தேதியன்று கருடசேவை வைபவமும், 24- ம் தேதி நம்பெருமாள் நெல் அளவை கண்டருளும் வைபவமும், ஏப்ரல் 25 -ம் தேதி நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளும் வைபவமும் நடைபெறுகிறது
சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று காலை 6 மணியளவில் திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவுக்கு தமிழகம் மட்டுமின்று வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவர். இந்த நிலையில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.