ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர திருவிழா: ஆண்டாளுக்கு சீர்வரிசை வழங்கிய ஸ்ரீரங்கநாதர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடைபெறும் ஆடிப்பூர திருவிழாவிற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து சீர்வரிசை கொண்டுவரப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 16 சக்கரத்தேர், ஐந்து கருட சேவை, சயன சேவை உற்சவரான ஆண்டாள், ரங்க மன்னார், பெரியாழ்வார் ஆகியோர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சீர்வரிசை பொருள்கள் கொண்டு வரப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா தேரோட்டத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர்வரிசை பொருள்கள் கொண்டு செல்வது வழக்கம்.
அதன் அடிப்படையில், ஆடி மாதம் நடைபெறும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்திற்கு ஸ்ரீரங்கநாதர் வழங்கக்கூடிய எதிர் சீராக ஒவ்வொரு ஆண்டும் பட்டு வஸ்திரங்கள், பழங்கள், மங்களப் பொருள்கள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சமர்ப்பிக்கப்படும்.

அதன் அடிப்படையில், இன்று ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருள்களை கோயில் நிர்வாகத்தினர் வரவேற்று அதனை ஏற்றுக்கொண்டு ஆண்டாள் ரங்கமன்னாருக்கு அணிவித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.