10 நாள்களுக்கு ரயில்களின் இயக்கம் மாற்றம்! சென்னை மெட்ரோ அறிவிப்பு
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் தெரிவித்துள்ளது.
அறிவிப்பில் சென்னை மெட்ரோ கூறுகையில்,
தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ இரயில் சேவை இயக்கப்படும் இடைவெளியில் செப். 9 முதல் செப். 19 வரை மாற்றம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும் (Green Line) நீல வழித்தடத்திலும் (Blue Line) தண்டவாள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளது.
பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான இரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.
பராமரிப்புக் காலக்கட்டத்தில் காலை 5 மணிமுதல் 6.30 மணிவரையில் ரயில் இயக்கப்படும் நேரங்கள் 7 நிமிட இடைவெளியிலிருந்து 14 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், 6.30 மணிக்குமேல் வழக்கம்போல எவ்வித மாற்றமுமின்றி ரயில்கள் இயக்கப்படும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.