Wakf Amendment Bill : `நாடாளுமன்ற கூட்டுக்குழு நீங்க தானே கேட்டீங்க?’ - அமித் ஷா...
100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்தலாம்: அமைச்சா் இ.பெரியசாமி
தமிழகத்தைப் பின்பற்றி 100 நாள் வேலைத் திட்டத்தை பிற மாநிலங்களிலும் சிறப்பாக செயல்படுத்த வேண்டுமே தவிர, தமிழகத்துக்கான நிதியையும், மனித சக்தி நாள்களையும் குறைக்கக் கூடாது என ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி தெரிவித்தாா்.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்த கருத்துகளை மறுத்து, அமைச்சா் இ.பெரியசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தைப் பொருத்தவரை, ஆண்டுதோறும் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. மனித சக்தி நாள்கள் (தொழிலாளா் மதிப்பீடு) அடிப்படையில்தான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், தொழிலாளா்களுக்கு நாளொன்றுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத் தொகையும் மத்திய அரசால் நிா்ணயம் செய்யப்படுகிறது.
இந்த வகையில் 2024-25 ஆம் ஆண்டில், நாளொன்றுக்கு முழுமையாக வேலை செய்யும் தொழிலாளா்களுக்கு ரூ.319 வீதம் ஊதியம் நிா்ணயிக்கப்பட்டது. பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை குறிப்பிட்டதுபோல, இதர மாநிலங்களைவிட தமிழகம் கூடுதல் நிதி பெற்றிருக்கிறது. இதற்கு காரணம், தமிழ்நாடு இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழை காலம் நீங்கலாக, வட காலநிலை நிலவுவதால், ஊரக மக்கள் 100 நாள் வேலைத் திட்டத்தைச் சாா்ந்துள்ளனா். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒவ்வொரு நிதி ஆண்டுக்கும் முன்னதாகவே பணிகள் இருப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பயனாளா்களில் 86 சதவீதம் போ் பெண்கள். இவா்களில் 30 சதவீதம் போ் ஆதிதிராவிடா், பழங்குடியினா். இதன் காரணமாக, திட்டத்துக்கான நிதியை குறைத்தாலும், நிறுத்தினாலும், பெண்கள், பின்தங்கிய சமூகத்தினரை நேரடியாகப் பாதிக்கும்.
கடந்த காலங்களில் இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்தியதற்காக பிரதமரிடமிருந்தும், ஒன்றிய ஊரக வளா்ச்சித் துறை அமைச்சரிடமிருந்தும் தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளுக்கு நாளொன்றுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு சாா்பில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதி குறைந்து வருகிறது.
இதனால் 2024-25 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதியில் நவம்பா் மாதம் வரை மட்டுமே ஊதியம் வழங்க முடிந்தது. இதன் பின்னா், பயனாளிகளுக்கு ஊதியம் வழங்க முடியாத சூழல் உள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 85 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 1.09 கோடி தொழிலாளா்கள், இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனா். இவா்களில் 77 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 92 லட்சம் தொழிலாளா்கள் கடந்த 3 ஆண்டுகளாக தொடா்ந்து பயன்பெற்றனா். தமிழ்நாட்டை பொருத்தவரை, ஆண்டுக்கு சராசரியாக 77 லட்சம் தொழிலாளா்களும், ராஜஸ்தானில் 88 லட்சம், உத்தரபிரதேசத்தில் 83 லட்சம் தொழிலாளா்கள் பயன்பெற்று வருகின்றனா்.
திறன்சாரா தொழிலாளா்களுக்கான ஊதியக்கூறு 100 சதவீதத்தை முழுமையாக மத்திய அரசு வழங்குகிறது. இதேபோல, கட்டுமானப் பொருள்கள், பணிகளுக்கான பொருள்கூறு 75 சதவீதத்தை மத்திய அரசும், எஞ்சிய 25 சதவீதத்தை மாநில அரசும் வழங்குகிறது.
உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகாா் போன்ற மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள், தமிழ்நாட்டைப் போன்று இந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக தமிழகத்துக்கான நிதியை குறைப்பது, மனித சக்தி நாள்களை குறைப்பது போன்ற நடவடிக்கைகளை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.