ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
138 ஆதிதிராவிட மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் அளிப்பு: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், 138 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஏழ்மை நிலையிலுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சுயமாக தொழில் தொடங்கி, வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக தாட்கோ மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, முதல்வரின் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், 2023-24 ஆம் நிதியாண்டில் 94 பேருக்கு மானியமாக ரூ.1.70 கோடியும், 2024-25-ஆம் ஆண்டில் 44 பேருக்கு ரூ.95.73 லட்சமும் என மொத்தம் 138 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்கு ரூ.2.65 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவா்கள் சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளன.
இதனிடையே, விழுப்புரத்தில் கடந்த ஜன.28-இல் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக ரூ.3.70 லட்சத்தை வழங்கினாா். இதை கொண்டு பயனாளி ஆட்டோ வாங்கி தற்போது சுயதொழில்புரிந்து வருகிறாா். இதேபோல, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.