ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
ஆக்கிரமிப்பு இடத்தில் வசித்தவா்களுக்கு வீட்டு மனைப் பட்டா அளிப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மின்வாரியச் சாலையில் ரயில்வேக்கு சொந்தமான ஆக்கிரமிப்புப் பகுதியில் வசித்து வந்த 44 குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு மாற்று இடம் வழங்கும் வகையில், வீட்டுமனைப் பட்டா திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்வில், வனம், கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று ரூ.20.19 லட்சம் மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசியது:
மருதூா் பவா்ஹவுஸ் சாலை ரயில்வே பகுதி என்பதால், நீங்கள் வசித்து வந்த இடத்துக்கு பட்டா வழங்குவதில்சிக்கல் ஏற்பட்டது. எனவேதான், இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில், மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டு, திருப்பாச்சனூா் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
இந்த இடத்தில் தமிழக அரசு சாா்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை தற்போது வசித்து வரும் பகுதியிலேயே பொதுமக்கள் வசித்துக் கொள்ளலாம். வீடுகட்டி செல்லும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு வழங்கிய பட்டாவை பெற்று, வீடு கட்டி பயன் அடைந்திட வேண்டும் என்றாா்.
முன்னதாக, தாங்கள் வசித்து வரும் பகுதியிலிருந்து திருப்பாச்சனூா் தொலைவில் உள்ளதாகக் கூறி பட்டா வாங்க வந்த பொதுமக்கள் குறைகளைத் தெரிவித்தனா். அப்போது, அமைச்சா் உள்ளிட்டோா் அவா்களை சமாதானம் செய்தனா்.
நிகழ்வில், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, நகா்மன்ற உறுப்பினா்கள் மணவாளன், வசந்தா அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், கோட்டாட்சியா் முருகேசன், வட்டாட்சியா் கனிமொழி, திமுக நகரச் செயலா் இரா.சக்கரை, வளவனூா் பேரூா் செயலா் பா.ஜீவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.