2-வது டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்குகிறாரா?
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் முதல் நாளில் சதம் விளாசினர். பந்துவீச்சில் இந்திய அணிக்கு இங்கிலாந்து சவாலளிக்கத் தவறியது. அந்த அணியில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்பட்டது.
2-வது டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சரா?
இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கவுன்ட்டி போட்டியில் விளையாடவுள்ளதால், இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியான தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோஃப்ரா ஆர்ச்சர் கவுன்ட்டி போட்டிகள் மூலம், மீண்டும் சிவப்புப் பந்து போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்தப் போட்டியில் எந்த ஒரு அசௌகரியமுமின்றி அவர் பந்துவீச்சில் ஈடுபடும் பட்சத்தில், இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அவர் சேர்க்கப்படலாம். பிளேயிங் லெவனில் அவர் விளையாடுவதற்கான வாய்ப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர், கடந்த நான்கு ஆண்டுகளாக காயம் காரணமாக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 2 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இதையும் படிக்க: 2027 ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித், கோலி விளையாடுவார்களா? கங்குலி பதில்!