பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம்: பென் டக்கெட்
ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் என இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. அந்த அணியில் ஆலி போப் அதிகபட்சமாக 106 ரன்கள் எடுத்தார். ஹாரி ப்ரூக் 99 ரன்களும், பென் டக்கெட் 62 ரன்களும் எடுத்தனர்.
பும்ராவை எதிர்கொள்வது கடினம்
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் நிலையில், ஜஸ்பிரித் பும்ரா உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் எனவும், அவருக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினம் எனவும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஜஸ்பிரித் பும்ரா உலகின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர். எந்த ஒரு சூழலாக இருந்தாலும், ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர் ஒருவரை எதிர்கொள்வது மிகவும் கடினம். பந்தினை இரண்டு விதமாகவும் ஸ்விங் செய்யும் திறன் கொண்டவர் பும்ரா. ஒரு ஓவரில் அவரால் நான்கு வித்தியாசமான முறைகளில் பந்துவீச முடியும். அவர் பௌன்சர் வீசப்போகிறாரா, மெதுவாக வீசப் போகிறாரா, யார்க்கர் வீசப் போகிறாரா அல்லது ஸ்விங் செய்யப்போகிறாரா என்பது நமக்குத் தெரியாது. அவர் பந்துவீச்சில் மிகவும் கவனமாக விளையாட வேண்டும். இல்லையெனில், அவருக்கு எதிராக ரன்கள் குவிப்பது கடினம் என்றார்.
முதல் இன்னிங்ஸில் பென் டக்கெட், ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் போல்டானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் புதிய சாதனை!