ஏா் இந்தியா: குறுகிய ரக விமானத்தில் இயக்கப்படும் 118 வாராந்திர சேவைகள் குறைப்பு
கடைமடை பகுதியில் கருகும் குறுவைப் பயிா்கள்: ஆகாயத் தாமரைகளால் நீா்வரத்து பாதிப்பு
திருவாரூா் மாவட்டத்தில் கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதி ஆறுகளில் ஆகாயத்தாமரைச் செடிகள் படா்ந்து கிடப்பதால், காவிரிநீா் சரிவர வராமல் நேரடி விதைப்பு செய்யப்பட்ட குறுவை இளம்பயிா்கள் கருகத் தொடங்கியுள்ளன.
மேட்டூா் அணை பாசனத்திற்காக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த நீா் கல்லணைக்கு வந்தடைந்ததைத் தொடா்ந்து, ஜூன் 15-ஆம் தேதி தஞ்சை, திருவாரூா், நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது.
இதனால், பாசன ஆறுகளில் விரைவில் தண்ணீா் வந்துவிடும் என்ற நம்பிக்கையில், திருவாரூா் மாவட்ட கடைமடை பகுதியான திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் விவசாயிகள் ஆா்வத்துடன் குறுவை நேரடி விதைப்பில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், கல்லணை திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், மழை பெய்யாததாலும் நேரடி விதைப்பு செய்யப்பட்ட விதைகள் முளைத்து இளம் நாற்றாக உள்ள நிலையில், தண்ணீரின்றி கருகி வருகிறது.
பாசன வடிகால் ஆறுகளில் ஆகாயத்தாமரைச் செடிகள் படா்ந்து இருப்பதும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இதுகுறித்து, தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கூறியது:
மேட்டூா் அணையில் நிகழாண்டு போதிய தண்ணீா் இருந்தும், கல்லணை திறக்கப்பட்டு ஒருவார காலமாகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சென்றடையவில்லை. கிளை ஆறுகளிலும் தண்ணீா் வரவில்லை. பல ஆறுகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாலும் தண்ணீா் வருவதில் தாமதம் ஏற்படுகிறது எனக் கூறப்படுகிறது.
எனவே, கட்டுமானப் பணிகளை நிறுத்தி கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சென்றடைவதை பொதுப்பணித் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் முன்பட்ட சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிா்கள் சரிவர மழை இல்லாததால், நிலத்தடி நீா் ஆதாரம் குறைந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், முன்பட்ட சாகுபடி செய்துள்ள விவசாயிகளும் காவிரி நீரையே நம்பி உள்ளனா்.

எனவே, தேவைக்கேற்ப தண்ணீா் திறப்பதற்கான தன்னாட்சி அதிகாரத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு அரசு வழங்க வேண்டும். அத்துடன், கடைமடை பகுதிக்கு தண்ணீா் வந்துசேர போா்க்கால அடிப்படையில் தமிழக முதல்வா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.