புதுமைப் பெண் திட்டம் மாணவிகளிடையே அபரிமித வரவேற்பு: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பெ...
2-வது போட்டியில் விளையாட விராட் கோலி தயார்; பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 9) கட்டாக்கில் நடைபெறுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இதையும் படிக்க: ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்த அலெக்ஸ் கேரி!
பிளேயிங் லெவனில் யாருக்கு இடமில்லை?
முழங்கால் வீக்கம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக பிளேயிங் லெவனில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்று விளையாடினார்.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாட விராட் கோலி தயாராக இருப்பதாக இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சீதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு விராட் கோலி முழு உடல்தகுதியுடன் இருக்கிறார். அவர் நன்றாக பயிற்சியில் ஈடுபட்டார். பிளேயிங் லெவனில் யார் இருக்கப் போகிறார்கள் என்பதை என்னால் கூற முடியாது. பிளேயிங் லெவனை கேப்டனும், தலைமைப் பயிற்சியாளரும்தான் தேர்வு செய்ய வேண்டும். அதனால், பிளேயிங் லெவன் குறித்து என்னால் பதிலளிக்க முடியாது என்றார்.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் இலக்கல்ல, இந்தியாவை வீழ்த்துவதும்தான்: பாக். பிரதமர்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் மூலம் ஒருநாள் போட்டிகளில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக வீரராக களமிறங்கினார். அவர் அறிமுகப் போட்டியில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலிக்குப் பதிலாக முதல் போட்டியின் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர், அதிரடியாக 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடும் பட்சத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் இவர்கள் இருவரில் ஒருவர் பிளேயிங் லெவனில் இடம்பெறாமல் போகலாம்.
இரண்டாவது போட்டிக்கான பிளேயிங் லெவனில் யார் இடம்பெறப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.