2 குழந்தைகள் உள்பட 4 உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது ஹமாஸ்!
போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
காஸா போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேலைச் சேர்ந்த 6 பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், 4 பேரின் உடல்களை வியாழக்கிழமை அனுப்புகிறது.
முன்பு 3 பேரை மட்டுமே விடுவிப்பதாக இருந்த நிலையில், 6 பேரை விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான கலீல் அல்-ஹய்யா விடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பிபாஸ் குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் வியாழக்கிழமை ஒப்படைக்கவுள்ளதை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
2023 அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். பலர் பிணைக்கைதிகளாக சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் இஸ்ரேலில் வசித்துவரும் ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த பிபாஸ் குடும்பத்தினரும் அடங்குவர். (சிறைபிடிக்கப்பட்டபோது) 9 மாதக் குழந்தை க்ஃபிர் பிபாஸ், 4 வயது குழந்தை ஏரியல், 32 வயது தாய் ஷிரி மற்றும் அவரின் கணவர் யார்டென் (34) ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதில், தாய் ஷிரியும் அவரின் குழந்தைகளான க்ஃபிர் பிபாஸ், ஏரியல் ஆகியோர் உயிரிழந்ததாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. மேலும், தந்தை யார்டென் உயிருடன் இருக்கும் விடியோவையும் வெளியிட்டிருந்தது. அதில், எனது குடும்பம் அழிந்ததற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவே காரணம் எனக் கூறியிருந்தார்.
இது குறித்து அப்போது விளக்கம் அளித்த இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினர் உளவியல் ரீதியாக யார்டெனுக்கு தொல்லை கொடுத்துள்ளதாகவும், பிபாஸ் குடும்பத்தில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களை இஸ்ரேல் அரசிடம் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை