2025-ல் இதுவரை ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு நிதி வெளியேற்றம்!
2025-ஆம் ஆண்டில் இதுவரை இந்திய பங்குச் சந்தையில் இருந்து ரூ. 1 லட்சம் கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. பிப்ரவரில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரூ. 21,272 கோடி வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து வரி விதிப்பில் செய்த மாற்றங்கள் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட நிலையற்றத்தன்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து வெளிநாட்டு முதலீடுகள் குறைந்து வருகின்றன.
கடந்த ஜனவரி மாதத்தில் ரூ. 78,027 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன. பிப்ரவரியில் இரண்டு வாரங்களில் 21,272 கோடி நிதி வெளியேறியுள்ளது. இவை இரண்டையும் சேர்த்து ரூ. 99,299 கோடி வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளது.
ஜியோஜித் என்ற நிதிச் சேவை நிறுவனத்தின் மூத்த முதலீட்டு வல்லுநர் வி.கே. விஜயகுமார், டாலர் மதிப்பு குறையும்போது வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது தலைகீழாக நடக்கும் என்றும் அதுவரை இந்த நிலை தொடரும் எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் சர்வதேச அரசியலானது, இந்தியா போன்ற ஏற்ற இறக்கங்கள் அடிக்கடி நிகழும் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீட்டு கொள்கையில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால், இந்திய பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.