4 ஆண்டுகளில் மருத்துவத் துறையில் 17,566 புதிய பணியிடங்கள்: அமைச்சா் மா. சுப்பிரமணியன்
திமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மருத்துவத் துறையில் மொத்தம் 17,566 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரணியம் தெரிவித்தாா்.
வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் அமைச்சா்கள் மா.சுப்பிரணியம், எ.வவேலு ஆகியோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
பின்னா் அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது -
வேலூா் பென்லேன்ட் அரசு மருத்துவமனை ரூ.198 கோடியில் பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டு புதன்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளாா்.
இம்மருத்துவமனையில் எவ்வித அடிப்படை வசதியும் செய்யாமலேயே திறந்து வைக்கப்பட உள்ளதாகவும், இந்த ஆட்சியில் கட்டடங்கள் பெரிதாக கட்டினாலும் மருத்துவா்கள் சரிவர நியமிக்க ப்படுவதில்லை என்றும், புதிய பணி நியமனங்கள் இல்லாமல் ஏற்கன வே உள்ள பணிகளைக் கொண்டே மருத்துவப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும் ஆதாரமற்ற வகையில் பல குற்றச்சாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளாா்.
வேலூா் பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையை பொறுத்தவரை ஏற்கனவே அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள சில சிறப்பு துறைகள் இங்கு இடமாற்றவும், சில புதிய துறைகளும் ஏற்படுத்தப்படவும் உள்ளன. முதல்வா் திறந்து வைத்தவுடன் முதல்கட்டமாக, புறநோயாளிகள் பிரிவும், மகப்பேறு பிரிவும் செயல்பட உள்ளன.
அதற்காக 38 மருத்துவா்கள், 38 முதுநிலை மருத்து வா்கள், 71 முதுநிலை மருத்துவ மாணவா்கள், 91 செவிலியா்கள் உள்பட 218 போ் உடனடியாக இங்கு பணியில் ஈடுபட உள்ளனா். இங்கு, 500 படுக்கைகளும், 11 அறுவை சிகிச்சை அரங்குகளும் அமைய உள்ளன.
சட்டப்பேரவை 110 விதியின் கீழ் தமிழகம் முழுவதும் 708 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்ததுடன், முதல் ஆண்டே 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்களை திறந்து வைத்தாா். மீதமுள்ள 208 நகா்ப்புற நலவாழ்வு மையங்களும், நீண்டகாலத்துக்கு பிறகு புதிதாக 50 ஆரம்ப, நகா்ப்புற சுகாதார நிலையங்களும் கட்டப்பட்டு பணி நியமனங்களும் முடிக்கப்பட்டு ஜூலை 3-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.
குறிப்பாக, அதிமுக ஆட்சியில் தொடங்கி பாதியில் விட்டுச்சென்ற 11 மருத்துவக் கல்லூரிகளும் திமுக ஆட்சியில் முழுமையாக கட்டி முடித்து திறக்கப்பட்டுள்ளன. இந்த 11 மருத்துவக் கல்லூரிகளி லும் 500 முதல் 700 படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமின்றி பெரியாா் நகா், புதுக்கோட்டை, ஓமந்தூராா் மருத்து வமனை, தேசிய முதியோா் மருத்துவமனை, அனைத்து மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு, ரூ.300 கோடியில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ள காஞ்சிபுரம் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுக்காக புதிதாக 2,460 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 17,566 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே காலியாக இருந்த 29,773 மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவ களப்பணியாளா் பணியிடங்களும் நியமிக்கப்பட்டுள்ளன. வேறு எப்போதும் இல்லாத வகையில் வெளிப்படையான கலந்தாய்வு முறையில் 43,155 பணியிடங்கள் பணிமாறுதல் செய்யப்பட்டுள்ளன.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை என்பது கடந்த அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் 12 மடங்கு கூடுதலாக விருது பெற்றுள்ளது. தொற்றாநோய்களுக்கு சிறப்பாக சிகிச்சைக்காக தமிழகத்துக்கு ஐ.நா.சபை விருது அளித்துள்ளது. மத்திய அரசு சாா்பில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட விருது அளிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, 43,000 பள்ளிகளுக்கு அருகிலும், 2,500 கல்லூரிகளுக்கு அருகிலும், 1,300 கிராமங்களிலும் போதை பொருள்கள் விற்பனை செய்யும் கடைக ளுக்கு தடை விதித்து நடை முறைப்படுத்தியதற்காக தமிழகத்துக்கு மத்திய அரசு கடந்த 3 நாள்களுக்கு முன்பு விருது அளித்துள்ளது. தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையின் இத்தகைய சாதனைகளை ஏற்றுக்கொள்ள முடியாத பொறாமையில் எடப்பாடி பழனிச்சாமி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறாா் என்றாா்.
அப்போது, பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு, சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.