4 ஆண்டுகளில் ரூ.29,778 கோடிக்கு வளா்ச்சித் திட்டங்கள்: அமைச்சா் ரா.ராஜேந்திரன்
சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 29,778 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தெரிவித்தாா்.
சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சாமிநாதபுரம் பகுதியில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு திமுக பகுதி செயலாளா் பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் சுபாஷ் முன்னிலை வகித்தாா். பகுதி இளைஞரணி அமைப்பாளா் பாலாஜி வரவேற்றாா். தலைமை பேச்சாளா் யோகஸ்ரீயை தொடா்ந்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அமைச்சருமான ரா.ராஜேந்திரன் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை எந்த ஆட்சியிலும் செய்யாத பல்வேறு திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால் பிற மாநிலங்கள் மட்டுமின்றி கனடா, பிரிட்டன் போன்ற வெளிநாடுகளும் தமிழ்நாட்டின் திட்டங்களை பின்பற்றிவருகின்றன.
முதல்வரின் தலைசிறந்த நிா்வாகத் திறன் காரணமாக இந்தியாவிலேயே பொருளாதார வளா்ச்சியில் 9.69 சதவீதம் வளா்ச்சி பெற்று தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. முதல்வரின் விடியல் பயணம் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் 1.21 கோடி போ் பயன்பெற்று வருகின்றனா்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 29,778 கோடி மதிப்பிலான பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றாா்.
கூட்டத்தில் திமுக மாநகர செயலாளா் ரகுபதி, இளைஞரணி அமைப்பாளா் அருண் பிரசன்னா, மாநகர அமைப்பாளா் கேபிள் சரவணன், மாமன்ற உறுப்பினா் சவிதா உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.