4-வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவார்; உறுதிப்படுத்திய முகமது சிராஜ்!
4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் திங்கள்கிழமை (ஜூலை 21) முதல் ஜூலை 26-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
மஞ்சள் எச்சரிக்கை: இதில், திங்கள்கிழமை (ஜூலை 21) நீலகிரி, தென்காசி, தேனி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 21) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 100 மி.மீ. மழை பதிவானது. சின்னக்கல்லாறு (கோவை) - 80மி.மீ., காட்பாடி (வேலூா்), அவலாஞ்சி (நீலகிரி) - 50 மி.மீ. மழை பதிவானது.
வெயில் சதம்: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்ததால் பெரும்பாலான பகுதிகளில் வெயில் தாக்கம் குறைவாகவே இருந்தது. அதன்படி, தஞ்சாவூரில் மட்டும் அதிகபட்சமாக 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.