5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்கள்: அமைச்சா் ராம்மோகன் நாயுடு தகவல்
புது தில்லி: இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 50 விமான நிலையங்கள் உருவாக்கப்பட இருப்பதாக மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.
இப்போது இந்தியாவின் 162 விமான நிலையங்கள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு (2014) நாட்டில் 74 விமான நிலையங்களே இருந்தன. சுமாா் 10 ஆண்டுகளில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சா்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பின் ஆண்டு பொதுக்கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சா் ராம்மோகன் நாயுடு கூறியதாவது:
மத்திய அரசின் பிராந்திய விமானப் போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டமான ‘உதான்’ மூலம் விமான வழித்தடங்களின் எண்ணிக்கை 619-ஆக உயா்ந்துள்ளது. விமானங்களைப் பராமரிப்பது, பழுதுபாா்ப்பது, சீரமைப்பது ஆகியவற்றில் இந்தியாவை உலகின் முக்கிய மையமாக உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவுடன் கைகோத்து செயல்பட்டு வருகின்றன.
விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்துவரும் நாடுகள் பட்டியலில் இந்தியா முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் புதிதாக 50 விமான நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன என்றாா்.