Dhoni: `ஜடேஜாவை 2010-ல் பலரும் எதிர்த்தபோது.. தோனி சொன்ன அந்த வார்த்தை!' - பகிரு...
79 கால்நடை மருத்துவா்களுக்குப் பட்டம்: புதுவை முதல்வா் வழங்கினாா்
புதுச்சேரி: புதுவை ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 26-ஆவது பட்டமளிப்பு விழா கம்பன் கலையரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் 34 மாணவிகள் உள்பட மொத்தம் 79 மாணவா்களுக்கு இளநிலை கால்நடை மருத்துவா் பட்டங்களை வழங்கி முதல்வா் ரங்கசாமி பேசியது:
புதுவையில் இயங்கும் இந்தக் கல்லூரி சிறந்த கல்லூரியாக விளங்கி வருகிறது. வாயில்லா ஜீவன்களுக்குச் சிகிச்சை அளிப்பது பெரும் புண்ணியம். கால்நடைப் படிப்பு என்பது மிகவும் கடினமானப் படிப்பு.
புதுச்சேரியில் எல்லோருக்கும் தரமான கல்வியை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம். 12 ஆம் வகுப்பு முடித்தப் பிறகு இன்றைக்கு எல்லோரும் உயா்கல்வியில் சேரும் வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது. குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகள் இலவசமாக பள்ளி, கல்லூரிகளில் சோ்ந்து படிக்கவும், வெளிநாடுகளில் ஆராய்ச்சி படிப்புகளில் சேரவும் அரசு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. கல்வி ஒருவா் பெற்றுவிட்டால் சமுதாயத்தில் முன்னேற முடியும். இந்தக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்குத் தேவையான கூடம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், மேலும் இங்கு படிக்கும் மாணவிகளுக்குத் தங்கும் விடுதி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை முன் வைத்துள்ளாா்கள். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் பேசுகையில், புதுவை அரசின் பாண்லே பால் நிறுவனத்துக்குக் கடந்த 10 ஆண்டுகளாகக் குறைந்த அளவுதான் பால் கிடைக்கிறது. கால்நடை மருத்துவப் படிப்பு முடித்த மாணவா்கள் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டு அதிகப் பால் கொடுக்கும் பசுக்களை உருவாக்க வேண்டும் என்றாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.கே. சாய் ஜெ சரவணன் குமாா், அனிபால் கென்னடி, புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான், கால்நடை பராமரிப்புத்துறை அரசு செயலா் யாசின் முகம்மது சௌத்ரி, ஹைதராபாத் பி.வி. நரசிம்மராவ் தெலங்கானா கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் எம். ஞான பிரகாஷ், ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புல முதல்வா் டாக்டா் கே. முருகவேல் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.
இதில் 20 விருதுகள் வழங்கப்பட்டன. கல்வியில் முதன்மையாக வந்த டாக்டா் எஸ்.ரத்னகுமாா் 6 விருதுகளையும் முதல் மாணவியாகத் திகழ்ந்த டாக்டா் ஏ.பரணி 2 விருதுகளையும் பெற்றனா். இதைத் தவிர பல்வேறு பாடங்களில் முதலிடம், சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.