Chhonzin Angmo: எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் 'பார்வை சவால்' கொண்ட இந்தியப் பெண்!
இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான பார்வை சவால் கொண்ட சோன்சின் அங்மோ, மனஉறுதியோடு எவரெஸ்ட்டில் ஏறி இந்தியாவின் மூவர்ணக்கொடியை அதன் சிகரத்தில் நட்டுள்ளார். 'எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் பார்வை சவால் கொண்ட இந்தியப் பெண்' என்ற வரலாற்று சாதனையும் இவர் படைத்துள்ளார்.
சோன்சின் 3 வயது முதல் பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டு வந்த நிலையில், 8 வயது சிறுமியாக இருந்தபோது பார்வையை முற்றிலும் இழந்திருக்கிறார். மருந்து ஒவ்வாமைக் காரணமாக சோன்சின் பார்வை இழந்ததாக சொல்லப்படுகிறது. பார்வை சவால் கொண்டவர்களுக்கான பள்ளியில் சேர்ந்து பயின்ற சோன்சின், தொடர்ந்து பட்டப்படிப்பையும் முடித்திருக்கிறார். 2016-ல் இருந்து மணாலியிலுள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேற்ற விளையாட்டு நிறுவனத்தில் சேர்ந்து மலையேறுவதற்குப் பயில தொடங்கினார்.

சோன்சின் லடாக்கிலுள்ள பல சிகரங்களில் ஏறியுள்ளார். 2021-ம் ஆண்டில், ஆயுதப்படை வீரர்கள் டீம் தலைமையில் நடைபெற்ற ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடமில் மாற்றுத்திறனாளிகளோடு இணைந்து சியாச்சின் பனிப்பாறைக்கு சென்றார். ஒவ்வொரு மலை ஏறுதலின்போதும் தன்னுடைய ஆர்வம் அதிகரித்துக்கொண்டே இருந்ததாக சோன்சின் குறிப்பிடுகிறார்.
சில தினங்களுக்கு முன்னால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார் சோன்சின். எவரெஸ்ட் சிகரத்திலுள்ள முகாம் ஒன்றிலிருந்து (6065 மீட்டர்) முகாம் இரண்டுவரை (6400 மீட்டர்) செல்ல பழக்கப்படுத்துதல் பயிற்சி தொடங்குவதற்கு முன்பே, முதலில் மவுண்ட் லோபுச்சே சிகரத்தை (6119 மீட்டர்) ஏறிய சோன்சின், பின், முகாம் மூன்று (7200 மீட்டர்) மற்றும் முகாம் நான்கிற்கும் (7920 மீட்டர்) முன்னேறியிருக்கிறார்.
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய என் சகோதரி அந்த சந்திரனையே அடைந்தது போல உணர்கிறேன்
எவரெஸ்ட் சிகரம் தொட்டதுக் குறித்து பேசிய சோன்சின், "எவரெஸ்ட் சிகரத்தில் காலடி எடுத்து வைத்தது முதல் மாற்றுத்திறனாளிகள் மனதில் மனஉறுதி விதைப்பதையே என் கனவாக கொண்டேன்; இது அதற்கான முதல்படி மட்டுமே. நம் மனதில் உறுதி இருந்தால், நம்மை எதுவும் தடுத்து நிறுத்திவிட இயலாது. என்னுடைய அடுத்த இலக்கு ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மிக உயர்ந்த சிகரங்களில் ஏறுவதே.
எனது பார்வைக்குறைபாடு குறித்து மக்கள் என்னைக் கேலி செய்தபோதும், என் தந்தை மற்றும் எனது குடும்பத்தினர்கள் என்னை ஆதரித்து என் மனதை திடமாக்கினர். நானோ, என் குடும்பத்தினரோ சோர்வடைந்திருந்தால், வாழ்க்கையில் ஒரு படிகூட முன்னேறியிருக்க முடியாது" எனக் கூறினார்.

தன் மகளின் வெற்றி குறித்து மனமகிழ்ந்த அமர் சந்த், "எங்கள் மகள்தான் எங்கள் உலகத்தின் சோலை. அவள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது எங்கள் கிராமத்திற்கு கிடைத்த வெற்றி'' என மகிழ்ச்சியாகக் குறிப்பிட்டிருக்கிறார். சோன்சினின் வெற்றி பற்றி அவர் தங்கை பேசுகையில், "எங்கள் கிராமத்திற்கு மேலே உள்ள மஞ்சள் மலைகளை நாங்கள் 'மூன்லேண்ட்' என அழைப்போம். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய என் சகோதரி அந்த சந்திரனையே அடைந்தது போல உணர்கிறேன்" என நெகிழ்ந்திருக்கிறார்.
சோன்சின் அங்மோவின் இந்த சாதனை, மனதில் உறுதி இருந்தால் எந்த சாதனையையும் சாத்தியமாக்க இயலும் என்றே எடுத்துரைக்கிறது!