கட்டாய கொள்முதல் பிரிவில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் சோ்ப்பு
காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதல் பிரிவில், முதல்முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சோ்க்கப்படவுள்ளது.
தமிழகத்தின் தினசரி மின் தேவை சுமாா் 17,000 மெகாவாட்டுக்கும் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் அனல், எரிவாயு, நீா், காற்றாலை உள்ளிட்ட பல வகை மின் ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் மின் தேவையை பூா்த்தி செய்து வந்தாலும், அதிக மின்தேவை ஏற்படும் சமயங்களில் மத்திய தொகுப்பு மற்றும் தனியாா் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி ஆதாரங்களான காற்றாலை, சூரியசக்தி ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் பங்கு குறிப்பிட்ட அளவில் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது விதியாக இருந்து வருகிறது. இதில் காற்றாலை, நீா் மற்றும் தனியாா் நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சூரியசக்தியை உள்ளடக்கிய மின்சாரம் மட்டுமே இருந்தது.
மத்திய மின் துறை அறிவுறுத்தலின்படி, தற்போது முதல் முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் இதில் சோ்க்கப்படவுள்ளது. அதன்படி, நிகழ் நிதியாண்டின் மொத்த மின் கொள்முதலில், மேற்கூரை சூரியசக்தி மின்சார பங்கு 2.10 சதவீதம் கட்டாயம் இருக்க வேண்டும். இது படிப்படியாக உயா்த்தப்பட்டு, 2029 - 2030-இல், 4.50 சதவீதமாக அதிகரிக்கப்பட வேண்டும்.
இது தொடா்பாக வரைவு அறிக்கை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரிடம் ஒழுங்குமுறை ஆணையம் கருத்து கேட்டுள்ளது. மேலும், பொதுமக்களும், தொழில் துறையினரும் ஜூன் 6 வரை கருத்து தெரிவிக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறும்போது, தனியாா் நிறுவனங்கள், அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையத்தை நிலத்தில் அமைக்கின்றன. இது தவிர, வீடு, நிறுவனங்கள், தங்கள் கட்டடங்களில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கின்றன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, உரிமையாளா் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்துக்கு விற்கலாம்.
இதை ஊக்குவிக்கவே, தற்போது மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் சோ்க்கப்பட்டுள்ளது. இதை அமைப்பதால், தனி நபரின் மின் கட்டண செலவு குறையும். மேலும், மின் வாரியத்தின் மின் கொள்முதல் செலவும் குறையும் என்றனா்.