தூய்மைப் பணியாளா் திட்ட முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு
தூய்மைப் பணியாளா்களை தொழில் முனைவா்களாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்ாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.
தூய்மைப் பணியாளா்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அவா்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கான அம்பேத்கா் தொழில் முன்னோடி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதேபோல, துாய்மைப் பணியாளா்களுக்கு, 50 சதவீத மானியத்துடன், நவீன கழிவுநீா் அகற்றும் ஊா்திகள், உபகரணங்கள் வழங்கும் மத்திய அரசு, நமஸ்தே திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களை செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என யூடியூபா் சவுக்கு சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமி நாதன் மற்றும் லட்சுமி நாராயாணன் முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தூய்மைப் பணியாளா்களை தொழில் முனைவோராக மாற்றும் இந்தத் திட்டத்தில் 213 தகுதியான பட்டியலின சமூகத்தைச் சோ்ந்த நபா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எந்த ஆதாரங்களும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை கொண்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கூடாது எனவும் வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்தத் திட்டத்தால் உண்மையாகவே பட்டியலின மற்றும் பழங்குடியினா் பயனடைய வேண்டும் என்பதே தங்கள் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்தத் திட்டத்தால் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையின் உறவினா் வீரமணி இயக்குநராக உள்ள தலித் வா்த்தக மற்றும் தொழில் சபை மற்றும் ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் அமைப்புகளே அதிக லாபம் அடைகின்றன. அதேநேரம், இந்தத் திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கு பாராட்டுகள் எனத் தெரிவித்தனா்.
அப்போது ஜென் கிரீன் லாஜிஸ்டிக்ஸ் தரப்பில், “இந்தத் திட்டத்தில் ஒப்பந்தம் செய்துள்ள 213 தூய்மை பணியாயாளா்களும் பங்குதாரா்களாக சோ்க்கப்படுவாா்கள் எனத் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.