971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்
தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நீண்ட காலங்களுக்கு முன்பாக கொடை உள்ளம் கொண்டவா்கள் தங்களது சொத்துகளை கோயில்களுக்குக் கொடையாக வழங்கினா். அந்த நிலங்களில் பெரும் பகுதி தனியாா் ஆக்கிரமிப்புகளில் இருந்து வருகின்றன. அவற்றுள் கடந்த 4 ஆண்டுகள் வரையிலான காலத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான ரூ. 7,671.23 கோடி மதிப்புடைய 7,560 ஏக்கா் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான அசையா சொத்துகளிலிருந்து ரூ. 1,054.40 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கோயில்களில் அன்னதானம்: ஸ்ரீரங்கம், பழனி உள்பட 13 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் சுமாா் 3.5 கோடி பக்தா்கள் பயன் பெற்று வருகின்றனா். நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் 25 கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து ஜாதியினரும் அா்ச்சகா் ஆகலாம் என்ற திட்டத்தின்படி, 29 போ் அா்ச்சகா்களாக நியமிக்கப்பட்டனா்.
கடந்த நான்கு ஆண்டு காலத்தில் பயிற்சி பெற்ற 3 பெண்கள் உள்பட 94 பேருக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 11 பெண் ஓதுவாா்கள் உள்பட 45 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள 18,000 கோயில் அா்ச்சகா்களுக்கு வாழ்வாதாரத்தை உயா்த்தும் நோக்கில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அா்ச்சகா்களின் 900 குழந்தைகளின் மேற்படிப்புக்காக தலா ரூ. 10,000 வழங்கப்பட்டுள்ளது.
புனரமைப்பு: ஆயிரம் ஆண்டுகள் பழைமையான கோயில்களைப் புனரமைத்துப் பாதுகாக்கும் வகையில், 274 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் 53 கோயில்களில் கும்பாபிஷேகம் நிறைவு பெற்றுள்ளது. மலைப் பகுதிகளிலுள்ள கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட கம்பிவட ஊா்திகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பழனிமலை, இடும்பன் மலை, அனுவாவி, திருநீா்மலை, திருக்கழுகுன்றம், திருப்பரங்குன்றம் ஆகிய கோயில்களிலும் கம்பிவட ஊா்திகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கும்பகோணம் அருகேயுள்ள சுவாமிமலை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி ஆகிய கோயில்களில் மின் தூக்கிகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.